வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்.. தீர்வு காணுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுவருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் மற்றும் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மத்தியச் செயற்குழுக் கூட்ட முடிவுகளின்படி நாளை (பிப்.27) முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை, 14,000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசிற்கும், உயர் அலுவலர்களுக்கும் ஏற்கனவே தீர்மானங்கள் அளிக்கப்பட்டுள்ள போதும், இதுவரை கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போராட்டங்களின் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், பொது மக்களுக்கான சேவைகள் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் பாதிப்படைந்துள்ளது.
கடந்த 2023 மே மாதம், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் மீது சுமுகத் தீர்வு காணப்பட்டது.
ஆனால் கடந்த 10 மாதங்களாக இந்த முடிவுகளின்படி ஆணைகள் வழங்கக் காலதாமதம் செய்யப்படுவதே இப்போராட்டத்திற்கான முக்கிய காரணம் ஆகும். முதலமைச்சர் கோரிக்கைகளை ஏற்று ஆணையிட்ட பின்பும், சில உயர் அலுவலர்கள் ஆணைகள் வழங்கக் காலதாமதம் செய்வது அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களைக் கடந்த ஆண்டு மே மாதமே நிரப்பிட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்த பின்பும், காலதாமதம் செய்வது விந்தையாக உள்ளது. ஆண்டிற்கு 1 கோடி சான்றிதழ்களை இணையவழியில் வழங்கும் நிலையில், அரசாணையின்படி, வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் (சான்றிதழ்) பணியிடங்கள் வழங்க மறுக்கப்படுகிறது.
முதலமைச்சரின் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" சிறப்புத் திட்டத்திற்கு ஒரு முகாமிற்கு ரூ.1 இலட்சம் செலவுகள் ஆகும் நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு, கால அவகாசம் வழங்காததால், கள அலுவலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை அலுவலகர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் பணிப் பாதுகாப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14000 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில்,
பொது நிர்வாகத்தில், குறிப்பாக தேர்தல் சமயத்தில் வருவாய்த்துறையின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு இந்த திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications