உளவுத் துறை எங்கே? சிறையில் பின்னப்பட்ட சதி! ஆளுநருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா? எடப்பாடி கோபம்
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும் , மாண்பையும் ,அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழ்நாடு ஆளுனர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது ,
தமிழக உளவுத்துறையும் ,காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும் குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும் , இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது ,
மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குரிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது . இது தான் #விடியா_திமுக மாடல். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசினார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் கருக்கா வினோத் என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கெனவே பிப்ரவரி மாதம் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டை வீசியவர். இவர் சரித்திர குற்றவாளி என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதாவது இவரது பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளது. இவர் ஏற்கெனவே தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் தேனாம்பேட்டை டாஸ்மாக் கடை மீதும் குண்டு வெடிவீசியவர் என விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications