தனி பெரும்பான்மையுடன் ஆட்சி.. எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை மு.க.ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறி இருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் பெரியார், அண்ணா ஆகியோரை கொச்சைப்படுத்தியதையும் கண்டிக்காமல் இபிஎஸ் அமைதி காத்தார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் அதிமுக தரப்பில் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக இத்துடன் முடிந்துவிட்டது என்று ஸ்டாலின் சொல்கிறார்.. ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.. அதிமுகவின் வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களை பாருங்கள்.
திமுகவுக்கு கவலை ஏன்?
இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அதிமுக வேட்பாளருக்கு பெற்று கொடுக்க வேண்டும். நமக்கு கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம். முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?
பொன் விழா கண்ட கட்சி இது
பயம் வந்துவிட்டது ஸ்டாலினுக்கு.. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் நோக்கம், நமது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்துள்ளோம். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று சொல்கிறார்கள். அதிமுக பொன் விழா கண்ட கட்சி.
திமுகவின் முயற்சிகள்
ஒவ்வொரு தொண்டரின் உடலிலும் ஓடுவது அதிமுகவின் ரத்தம். எம்ஜிஆர் மறைவுக்கு பின் கூட, கருணாநிதியால் அதிமுகவை வீழ்த்த முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தார். ஆனாலும் அதிமுகவை வீழ்த்த முடியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும்.
10 தோல்வி பழனிசாமியா?
எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக 10 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக சொல்லி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் 2011 முதல் 2021 வரை எத்தனை முறை தோல்வியடைந்தீர்கள் என்பதை திமுக எண்ணி பார்க்க வேண்டும்.
திமுக வாக்குறுதி
2011ல் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுகவால் அமர முடியவில்லை. அதிமுகவை விமர்சனம் திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. 2021ல் மக்களை ஏமாற்றுவதற்காக சுமார் 500க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications