பாஜக வேண்டாம்.. நீங்க வாங்க.. தடாலடி ‘தலை’யை இழுக்க ஈபிஎஸ் அணி முயற்சி! தூது விடும் கொங்கு சீனியர்!
சென்னை : ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சரமாரியாக விமர்சித்து வரும் கேசி பழனிசாமியை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளில் எடப்பாடி பழனிசாமி அணியின் கொங்கு மண்டல சீனியர் இறங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவை விமர்சித்துப் பேசி வந்ததால், அதிமுகவில் இருந்து கேசி பழனிசாமி நீக்கப்பட்டார். அவர் தற்போது எந்த அணியிலும் இல்லாமல், தனியாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் திட்டத்தோடு பேசி வருகிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும், பாஜகவுக்கு எதிரான புள்ளிக்கு நகர்ந்துள்ளதால், தங்கள் பக்கம் கேசி பழனிசாமியை கொண்டு வரலாம் எனத் திட்டமிட்டுள்ளனராம்.
இதற்காக, அதிமுகவின் சீனியரான கொங்கு மண்டல மாஜி, கேசி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த 3 பேர் சொல்வதுதான்! “யாருக்கும் கிடைக்காம”.. ஓபிஎஸ் பிளானை போட்டு உடைத்த அணி மாறிய நிர்வாகிகள்!
கேசிபி மூவ்
அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவராலும் கூட்டாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக இருந்தவர் கேசி பழனிசாமி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கூறி, அதிமுக நிர்வாகி போலவே தற்போதும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் கேசி பழனிசாமி. தமிழகம் முழுவதும் பயணித்து பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் கேசிபி.
கேசி பழனிசாமி
அதிமுகவுக்கு தலைமை தாங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக, பாஜக தலைமையின் தயவை நாடி இருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இரட்டை இலையும், சின்னமும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கேசி பழனிசாமி.
இழுக்க முயற்சி
இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே காட்டமாக விமர்சித்து வருகிறார் கேசி பழனிசாமி. கேசிபி-யை தங்கள் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும், ஓபிஎஸ் தரப்பின் பேச்சுவாரத்தைகளை கேசிபி பழனிசாமி பொருட்படுத்தவில்லை. முக்கியமான பதவியை அளிப்பதாகக் கூறியும், கேசி பழனிசாமி, ஓபிஎஸ் உடன் இணைய மறுத்துவிட்டார். இந்நிலையில் தான், ஈபிஎஸ் டீம் கேசி பழனிசாமியை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டல சீனியர்
எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொங்கு மண்டல மூத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் இருந்து கேசி பழனிசாமிக்கு தூது விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எடப்பாடியை கேசிபி கடுமையாக விமர்சித்து வரும் நேரத்தில் அவரை எப்படி தங்கள் அணிக்கே இழுக்க ஈபிஎஸ் தரப்பு முயற்சிக்கிறது என்ற கேள்வி எழலாம். அங்கு தான், செங்கோட்டையன் தரப்பில் இருந்து ஒரு முக்கியமான பாயிண்ட் முன்வைக்கப்படுகிறது.
பாஜக - கேசிபி
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும், பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் கேசி பழனிசாமி எப்போதுமே முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஓபிஎஸ் அணியில் கேசிபி சேராததற்கும், ஓபிஎஸ், பாஜகவுக்கு மிகவும் இணக்கமாகச் செல்கிறார் என்பதுதான் காரணம். ஆனால், இப்போது எடப்பாடி பழனிசாமி, பாஜகவையே சீண்டத் தொடங்கியுள்ளார். பாஜக கூட்டணியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற இடத்துக்கு நகர்ந்துவிட்டார்.
ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சல்
எனவே, கேசி பழனிசாமியை இப்போது தங்கள் பக்கம் இழுத்தால் சிறப்பாக இருக்கும் என ஈபிஎஸ் டீம் நினைக்கிறதாம். தொடர்ச்சியாக விவாதங்களில் பங்கேற்று அதிரடியாகக் கருத்துகளைப் பேசும் கேசிபி தங்கள் அணியில் இருந்தால் நமக்கு பிளஸ் என்று எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறாராம். பல விவகாரங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு பாயிண்ட் கொடுப்பதே கேசிபி தான் என்பதால், அவர் நம் பக்கம் வந்துவிட்டால், ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்பதும் ஈபிஎஸ் அணியின் கணக்காம்.
தனித்துப் போட்டி
அதையொட்டியே, செங்கோடையன், கேசி பழனிசாமியுடன் பேசும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில், அதிமுக தனித்துப் போட்டியிடும் எனக் கூறினார் செங்கோட்டையன். அவரும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே முன்வைக்கிறார் என்ற வகையில் கேசிபியுடன் நெருங்குவதாகத் தெரிகிறது. தொடர்ந்து, நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் என்பதை ஏற்படுத்தினார் என்றெல்லாம் செங்கோட்டையன் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.