“என்னை கேட்காம..” ஓபிஎஸ் ஆக்ஷனுக்கு உடனடி கவுன்ட்டர்.. எடப்பாடி தரப்பில் கேவியட் மனு! செம ஸ்பீடு!
சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வில் இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மேல்முறையீட்டிலும் ஈபிஎஸ்ஸுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் இரு தரப்பு வாதங்களும் கடந்த 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை தீர்ப்பு வரும் வரை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று (மார்ச் 28) நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

உடனே அப்பீல்
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் செல்லும் என உறுதி செய்யப்பட்டது. ஐகோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தீர்ப்பு வந்ததுமே அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற ஈபிஎஸ், பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் அணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணை
சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கட்சி விதிகளுக்கு எதிரானது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு 39வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

கேவியட் மனு தாக்கல்
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈபிஎஸ் சார்பில் வழக்கறிஞர்கள் கௌதம்குமார், பாலமுருகன் ஆகியோர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications