"எதிர்க்கட்சி துணைத்தலைவர்" சபாநாயகரை சந்திக்கும் எடப்பாடி.. அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முடிவு
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே அமர்ந்திருந்தினர். அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இபிஎஸ் கடிதம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின், ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். அதுமட்டுமல்லாமல் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கடிதமும் சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கப்பட்டது.

ஓபிஎஸ் இருக்கை
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழங்கிய கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த சட்டசபை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கான இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையிலேயே ஓ.பன்னீர்செல்வமும் அமரவைக்கப்பட்டார். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் இன்றும் அதே நிலையே நீடித்தது.

அருகருகே ஓபிஎஸ் - இபிஎஸ்
இன்று ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியபோது, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் இருக்கையிலும், ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். தனித்தனியாக செயல்பட்டு வரும் இருவரும் அருகருகே அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படாததால் கடந்த முறையே அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முக்கிய முடிவு
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இறுதியாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக நாளை சபாநாயகரை சந்திக்க இபிஎஸ் தரப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications