கட்சி மட்டுமில்ல.. கூட்டணிக்கும் ‘தல’.. டெல்லியை நோக்கி 'கொடி' பறக்கவிட்ட எடப்பாடி.. கவனிச்சீங்களா?
சென்னை : கடந்த சில நாட்களாக டெல்லி புயலால் தேனிப்பக்கம் தூது செல்வது போல வீசி வந்த சேலத்துக் காற்று மீண்டும் 'யு-டர்ன்' அடித்து நாமக்கல்லில் மையம் கொண்டுள்ளதை அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி, இடைக்காலப் பொதுச் செயலாளராக முடிசூடிக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் பெரிய நெருக்கடியே பாஜக தலைமையாகத்தான் இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பைச் சமாளிப்பதை எல்லாம் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் எடப்பாடி பழனிசாமி, குறுக்கே பாஜக வருவதால் தான் கொஞ்சம் யோசிக்கிறார். 2024 தேர்தலைக் குறிவைத்து பாஜக சொல்லும் அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி வைத்தாலும், எதிர்காலம் கருதி பாஜகவை எதிர்க்கவும் முடியாமல் குழம்பினார் ஈபிஎஸ்.
இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பாஜகவுக்கு 2 சேதிகளை வலுவாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் கிரீடத்தில் முள்
ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் பெருவாரியான ஆதரவுடன் தலைமை பொறுப்பிற்கான நாற்காலியை பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எடப்பாடி தரப்பின் ஒவ்வொரு மூவுக்கும் சளைக்காமல் பதிலடி கொடுத்து, முறையீட்டுக்கு மேல் முறையீடு என நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மாறி மாறி நாடி, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை கிரீடத்தில் முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

எடுபடவில்லையே
பொதுவாகப் பார்க்கும்போது, அதிகமான நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் எடப்பாடியின் கையே ஓங்கியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முக்கிய நிர்வாகிகள் இருக்கின்றனர் என்றும், இதனால் ஓபிஎஸ் தரப்பு பின்னடைவையே சந்தித்து வருகிறது என்றும் பார்வை இருக்கிறது. ஆனால், எடப்பாடி போட்டு வைத்த திட்டங்கள் எதுவும் எடுபடாததும், நான்கு மாதங்களாக ஓபிஎஸ் எதிர்ப்பைப் புறக்கணிக்க முடியவில்லை என்பதும் முக்கியமானது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சவுத் - வொர்க் அவுட் ஆகல
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை ஆஃப் செய்ய பல கணக்குகளைப் போட்டுப் பார்த்தார். தென் மாவட்டங்களை குறிவைத்து சில அதிரடி வேலைகளைச் செய்தார். கட்சியின் துணை பொதுச் செயலாளர், பொருளாளர், சட்டமன்ற துணைத் தலைவர் ஆகிய பதவிகளை ஓபிஎஸ் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கினார். ஆனாலும் பிளான் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமியே பங்கேற்க முடியாத நிலைதான் ஏற்பட்டது.

டெல்லியும் ம்ஹூம்
சவுத் கதை இப்படி என்றால், நார்த் - டெல்லியிலும் எடப்பாடி பழனிசாமியின் பகீரத பிரயத்தனங்கள் எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை. கட்சியே தன் பக்கம் தான் திரண்டு நிற்கிறது என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், டெல்லி தலைமை மசியவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஒருங்கிணைந்த அதிமுகவுடனே தாங்கள் கூட்டணி அமைக்க விரும்புவதாக பாஜக தலைமை தெளிவாகச் சொல்லிவிட்டது. மற்ற மூவரும் இதனை ஏற்றுக்கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்து வருகிறார். சமீபத்தில் கூட பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது.

டெல்லி கொடுக்கும் ஒரே சாய்ஸ்
ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் டெல்லியின் ஒரே சாய்ஸ். ஓபிஎஸ்ஸை நீங்கள் அவர் சொல்வது போல சம அதிகாரம் கொடுத்துச் சேர்ப்பீர்களோ, வேறு சமரசங்களுக்கு ஓபிஎஸ்ஸை கொண்டு வருவீர்களா என்பதெல்லாம் உங்கள் திறமை. 2024 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் நிற்பதும், கணிசமான இடங்களைப் பெறுவதும் தான் பாஜகவின் நோக்கம் என டெல்லியின் முடிவை தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டாராம். யதேச்சையாகவோ என்னவோ, இந்த மீட்டிங்குக்கு பிறகு எடப்பாடியும் கொஞ்சம் சைலண்ட் ஆனதால், உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

வாய்ஸ்
தனது ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி, கொஞ்ச நாள் கடுமையான விமர்சனங்களைத் தவிர்க்குமாறு கூறியதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல சமீப சில நாட்களாக ஈபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகளின் சவுண்டும் குறைந்துவிட்டது. தென் மாவட்ட நிலை, டெல்லியின் கட் அண்ட் ரைட் முடிவு போன்றவற்றால், ஈபிஎஸ் மனதில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. சேலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, லோக்கல் கட்சியினரை கூட அதிகம் சந்திக்காமல், சில ரகசிய சந்திப்புகளை அரங்கேற்றி இருந்தார்.

இப்போ இதான் முக்கியம்
பாஜகவை சரிக்கட்டுவது பற்றி எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வேறு எந்தப் பிரச்சனைகள் குறித்தும் யாருடனும் அவர் பேசிக்கொள்ளவில்லையாம். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம், சென்னை மழைநீர் பாதிப்பு என இரண்டு பெரிய விஷயங்களிலும் அதிமுக பெரிதாக இன்வால்வ் ஆகவில்லை. பாஜக, அதிமுகவை ஓவர்டேக் செய்து போய்க் கொண்டிருந்தாலும், எடப்பாடி அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

உன்னிப்பாக உன்னிப்பாக
இந்நிலையில் தான் சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிகழ்ச்சி அல்லாத அந்த மேடையில், ஓபிஎஸ் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கவில்லை. ஹிண்ட் ஆகக் கூட எதுவும் பேசவில்லை. இதுவும் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நாமக்கல்லில் தங்கமணி ஏற்பாட்டில் கடந்த மாதமே நடைபெறுவதாக இருந்து 2 முறை தள்ளிவைக்கப்பட்ட அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

பேச்சுக்கே இடமில்லை
இந்த மேடையில், இத்தனை நாட்களாக அமைதியாக இருந்ததற்கெல்லாம் சேர்த்து வைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பை விளாசினார் ஈபிஎஸ். ஜெயலலிதா நமக்கு கொடுத்துச் சென்ற ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக ஓட்டு போட்டவர் தான் ஓபிஎஸ். அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை நாம் கொடுத்தோம். அதை எல்லாம் மறந்து அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவரை நாம் என்னவென்று சொல்வது? அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான், இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கட் ரைட்டாக தெரிவித்துள்ளார்.

2024 தேர்தல் பிளான்
ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்கச் சொல்லும் பாஜகவுக்கு க்ளீனாக பதில் கொடுத்துள்ள அதேசமயம் இன்னொரு முடிவையும் தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதில் அதிமுக தான் வெல்லும். நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டி போட்டாலும் கழகத்தின் சார்பில் வெற்றி பெறுவார்கள் என 2024 தேர்தல் பிளானையும் பளிச்சென சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அப்போ பாஜக பிளான்?
ஓபிஎஸ், தினகரனை சேர்த்துக்கொள்ளும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால், பாஜக தலைமையே, தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கி, தலைவர்களுடன் பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில் தான் அதிமுக ‘தலைமையில்' மெகா கூட்டணி என அழுத்திச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தங்களிடம் பாஜக தலைமையில் இருந்து பேசியவர்கள் சொன்ன தகவலை அடுத்தே, தான் தேர்தலுக்குத் தயாராகி விட்டதையும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ஈபிஎஸ் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications