ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி வைத்தியம்.. அடிமடியிலேயே கைவைத்த எடப்பாடி.. அப்பப்பா.. பயங்கர வியூகம்!
சென்னை : டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, வளர்மதி பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆலோசனையில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

இருதரப்பு மோதல்
அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் கட்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையைக் கைப்பற்றுவாரா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி மீண்டும் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் போடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ள நிலையில் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவதில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பொதுக்குழு செல்லாது
நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக நேற்று நடைபெற்ற பொதுக்குழு நடந்ததாகவும், இந்த பொதுக்குழுவே செல்லாது என நீதிமன்ற அவமதிப்பு தொடரவிருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இந்த பொதுக்குழு செல்லாது என நிரூபிப்பதற்கு தேவையான சட்ட நுணுக்கங்கள் பற்றி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் ஓபிஎஸ்
இதற்கிடையே ஓ.பி.எஸ் டெல்லி சென்றுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ளபோதும், அவரது டெல்லி பயணத்தின் பின்னணியில் கட்சி விவகாரம் மறைந்திருப்பதாகவே பேசப்படுகிறது. அதற்கேற்றார்போல, அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. ஆகவே, ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ்
மேலும், பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியிடம், நீங்கள் கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்து ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டேன். தற்போது எனது பதவிக்கும், எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை விவகாரத்தை தீர்த்து வைத்து, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவு தர வேண்டும் என ஓ.பி.எஸ் பேசுவார் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இது ஒருபுறம் இருக்க, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை வைத்து ஒற்றைத் தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றைத் தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார். சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, கே.சி.வீரமணி, உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பாஜக தலையீடு பற்றி விவாதம்
பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அவைத்தலைவர் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருவதோடு, பிரதமர் மோடியைச் சந்திக்கவும் இன்று நேரம் கேட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையின்போது, பாஜகவின் தலையீடு பற்றியும், பொதுக்குழு தொட்ரபாகவும், ஓபிஎஸ் தரப்பின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவைத்தலைவர்
மேலும், இந்த ஆலோசனையின்போது, நேற்றைய பொதுக்குழுவில், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லுமா செல்லாதா என கட்சி விதிகளை முன்வைத்து விவாதித்துள்ளனர். அதன்படி, தேர்தல் அடிப்படையில் அவைத்தலைவர் நியமனம் செல்லும் என்றும், இது பொதுக்குழு தீர்மான வரம்பிற்குள் வராது என்றும் முடிவெடுத்துள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர் பதவி
மேலும், ஓபிஎஸ்ஸை ஆஃப் செய்வதற்கான வேறு திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்திற்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதியாகிவிட்டதாக பொருள் கொள்ளலாம் என்றும் பேசியுள்ளனர். ஓபிஎஸ் திட்டங்களை நொறுக்க வேண்டுமென்றால் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் வகிக்கும் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

சி.வி.சண்முகம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படியே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து, வைத்திலிங்கம் கருத்து முற்றிலும் தவறு என மறுத்துள்ளார். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இன்று இல்லை, நேற்றோடு காலாவதியாகிவிட்டன என அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பேசும்போது ஒவ்வொரு முறையும் ஓ.பி.எஸ்ஸையும், வைத்திலிங்கத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் குறிப்பிடும்போது 'முன்னாள்'என்ற வார்த்தையையும் அழுத்தமாகச் சொன்னார்.

ஓ.பி.எஸ்ஸுக்கு செக்
ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவைக் கூட்ட முடியாது என ஓபிஎஸ் தரப்பு கூறி வரும் நிலையில், அடிமடியிலேயே கை வைக்கும் வகையில், அந்தப் பதவியே நேற்றோடு காலாவதி ஆகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. டெல்லி சென்று பிரதமரை சந்தித்துப் பேசும் திட்டத்தில் ஓ.பி.எஸ் தரப்பு காய்நகர்த்தி வரும் நிலையில், ஓ.பி.எஸ்ஸுக்கு சட்ட விதிகள் ரீதியாக இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாகவே 'ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆன விஷயத்தை ஹைலைட் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications