‘கரூர் சம்பவத்தில் மர்மம்.. அசம்பாவிதம் நடப்பதற்காகவே தவெகவிற்கு அனுமதி’ – இபிஎஸ் அதிர்ச்சி புகார்
சென்னை சட்டசபை கூட்டத் தொடரில் கரூர் விவகாரம் தொடர்பாக திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் தங்கள் பேசுவதை அனுமதிக்கவில்லை என்று கூறி தர்ணா செய்த அதிமுக பிறகு சட்டமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். கரூர் சம்பவத்தில் மர்மம் உள்ளது. ஜனவரி மாதம் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று திட்டமிட்டு தவெகவுக்கு இடம் ஒதுக்கியுள்ளனர். என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "முதல்வர் பேசியதை நாங்கள் அமைதியாக கேட்டோம். கரூர் சம்பவம் பற்றி பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சட்டசபையில் நான் பேசியதை அவைக் குறிப்பில் நீக்கிவிடுவார்கள். அதை மக்களுக்கு தெரியப்படுத்த இங்கு பேசுகிறேன்.

தவெக தலைவர் 10 நிமிடங்கள் பேசுவதற்குள் செருப்பு வந்து விழுந்தது. தவெக தலைவர் ஏற்கனவே 4 மாவட்டங்களில் பேசியுள்ளார். அதை வைத்து எவ்வளவு கூட்டம் வரும் என்பதை உளவுத்துறை மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்திருக்கும். மக்கள் அதிகமாக வரும்போது கூடுதல் படைகளை இறக்கியிருக்க வேண்டும். அந்த கூட்டம் நடந்தபோது அரசும், உளவுத்துறையும் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்ததா.
ஸ்டாலின் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பு வழங்கியருந்தால் உயிர் சேத்த்தை தவிர்த்திருக்கலாம். அரசின் அலட்சியம் தான் மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றுள்ளது. அது எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. ஏடிஜிபி 500 பேர் பாதுகாப்புப் பணியில் இருந்த்தாக கூறினார். முதல்வர் இன்று பேசும்போது 650 காவலர்கள் பணியில் இருந்ததாக கூறுகிறார். இதிலேயே முரண்பாடு நிலவுகிறது.
உண்மையில் அங்கு 500 போலீசார் எல்லாம் இல்லை. ஜனவரி மாதம் எங்கள் கட்சி நிகழ்ச்சிக்காக இதே வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கேட்டபோது, வேலுச்சாமிபுரம் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். குறுகலான பகுதி என்பதால் அனுமதி மறுக்கிறோம். என்று காவல்துறை கூறியது. அந்த இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று திட்டமிட்டு தவெகவுக்கு இடம் ஒதுக்கியுள்ளனர் என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்து, அதே கரூரில் திமுக முப்பெரும் விழா நடத்திய இடத்தை ஒதுக்கியிருக்கலாமே. இந்த விவகாரத்தில் அவசர அவசரமாக ஏன் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கிறார்கள். நள்ளிரவு 1.45 மணிக்கு உடற்கூராய்வு செய்கிறார்கள். அங்கு உடற்கூராய்வு செய்ய 3 மேடைகள் தான் உள்ளன. உடற்கூராய்வு துறை மருத்துவர்கள் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும்.
சராசரியாக ஒரு உடற்கூராய்வுக்கு 1.30 மணிநேரம் ஆகும். 31 பேருக்கு எப்படி உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்ய முடியும். உண்மை சம்பவத்தை மறைப்பதற்காக அரசாங்கம் டிராமா செய்துள்ளது. தலைமை செயலகத்தில் 3 செயலாளர்கள், 1பொறுப்பு டிஜிபி, 1 ஏடிஜிபி, தவெக தலைவர் விதிகளை பின்பற்றியிருந்தால் சம்பவம் நடந்திருக்காது என்று கூறுகிறார்கள்.
அரசு ஏற்கனவே ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கும்போது, இவர்கள் எப்படி பேட்டி கொடுக்கலாம். விசாரணை ஆணையம் உயரதிகாரிகள் பேசியதற்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இதே அரசு கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டது. உடனடியாக அங்கு ஆய்வு செய்து மருத்துவமனை கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உரிமையை ரத்து செய்தது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே அந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறார்கள். கரூர் விவகாரத்தில் ஆர்வம் காட்டுவோர் கிட்னி திருட்டு வழக்கில் ஏன் வேகம் காட்டவில்லை. இதில் நாங்கள் எங்கும் அரசியல் பேசவில்லை. மக்கள் நலனுக்காக உண்மையை வெளியில் சொல்கிறோம். இதற்கு முதல்வர் ஏன் இவ்வளவு, பயம், பதற்றமாகிறார். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
நான் எழுச்சி பயணம் சென்றபோது சில இடங்களை தவிர எங்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. கரூர் சம்பவத்தில் மர்மம் உள்ளது. அதனால் தான் ஒவ்வொரு முறை நான் பேசும்போதும் அமைச்சர்கள் எழுந்து திசை திருப்புகிறார்கள். மக்கள் இறந்ததை பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. அதனால் தான் மடை மாற்றி பேசுகிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications