"சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள்!" ஓபிஎஸை விளாசும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மறைமுகமாக ஓபிஎஸை தாக்கி பேசினார்.
Recommended Video
அதிமுகவில் இன்று பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. சென்னை வானகரத்தில் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலில் எடப்பாடி பழனிசாமியைத் தற்காலிக பொதுச்செயலாளர் ஆக்கும் தீர்மானம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்
மேலும், ஓ பன்னீர்செல்வத்தைகட்சியில் இருந்து நீக்கவும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துடன் கட்சியில் உள்ளவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையின் தேவை, திமுக ஆட்சி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை தாக்கி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
இறுதியாக மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள். ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற தீர்மானம் இன்றைக்கு ஏகமானதாக நிறைவேறியுள்ளது. சாதாரண கிளைக்கழக செயலாளராக அதிமுகவில் பணியைத் துவக்கினேன். படிப்படியாகக் கட்சியில் வளர்ச்சியடைந்து பதவியைப் பெற்றுள்ளேன். கட்சியிலும் அரசிலும் எனக்குப் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரிடம் நற்பெயர் வாங்குவது சாதாரண விசயமில்லை.

கொம்பானாலும் அழிக்க முடியாது
இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அதிமுகதான். ஜனநாயக முறைப்படி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக் கடுமையாக நான் உழைப்பேன். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் நாம் வெற்றி பெறுவோம். கட்சியில் பதவி பெற்று அழிக்க நினைக்கும் எட்டப்பர்கள் அதிமுகவை விட்டு வெளியேறலாம். துரோகம் செய்பவர்களுக்குக் கட்சியில் ஒருபோதும் இடமில்லை. அதிமுக என்ற கட்சியை எந்த கொம்பானாலும் அழிக்க முடியாது.

திமுக ஆட்சி
நான் முதல்வராக பொறுப்பு ஏற்ற போது, ஒரு மாதம் கூட ஆட்சி நிலைக்காது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் ஸ்டாலினே அதிர்ந்து போகும் அளவுக்கு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தோம். திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் திமுக இப்போது செயல்படுத்துகிறது.

சட்ட ஒழுங்கு
தமிழகத்தில் மூட்டை மூட்டையாக எங்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்சன், கரப்சனை சரியாகச் செய்கிறார்கள். திமுகவுக்கு மக்கள் நலன் மீது கவலையில்லை. ஒரு குடும்பத்தினரின் நலன் மீது தான் அக்கறை உள்ளது.

ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்
இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத் தெரியும். மூத்த நிர்வாகிகளுக்குத் தெரியும். அதனால்தான் ஒற்றை தலைமை கேட்டார்கள். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத் தான் எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். நீங்கள் நினைப்பதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் எப்போதும் சுயநலமாகச் செயல்படுபவர். தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர். ஓபிஎஸ் எப்போதும் விட்டுக்கொடுக்கவில்லை. நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம். நீங்கள் ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதா தோற்க வேண்டும் என்பதற்காக அவருக்கு எதிராகவும் நீங்கள் செயல்பட்டு உள்ளீர்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை.

48 ஆண்டுகள்
48 ஆண்டுக் காலம் அதிமுகவிற்கு நான் விசுவாசமாக இருந்து செயல்பட்டுள்ளேன். ஒற்றைத்தலைமை பிரச்சினை தொடங்கிய போதே நிர்வாகிகள் சமாதானம் பேசினார்கள். ஓ.பன்னீர் செல்வம் கடைசி வரைக்கும் இறங்கி வரவேயில்லை. ஒற்றைத்தலைமைதான் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications