தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.. பிரதமர் மோடி முன்பாகவே சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னை: பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி முன்னிலையில் பேசியுள்ளார். 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்றுவோம் என்றும், இதுவே திமுகவுக்கு கடைசி தேர்தல் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மேடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அதேபோல் டிடிவி தினகரன் பேசுகையில், அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று வரவேற்றார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சகோதரர் டிடிவி தினகரன் என்று வரவேற்றார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்தியாவே மதுராந்தகத்தை பார்த்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி இங்கு வந்த உடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. மதுராந்தகம் பூமியே குலுங்கும் அளவிற்கு மக்கள் வெள்ளம் போல் இருக்கிறார்கள். இதுவே சட்டசபைத் தேர்தலில் நாம் வெல்வதற்கான சான்று. திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
அனைத்து துறைகளிலும் ஊழல்.. மக்களை வாட்டி வதைக்கும் அரசு தேவையா? மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? திமுக குடும்பம் ஆட்சியில் இருந்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் செய்த ஒரே சாதனை ஊழல் மட்டும்தான். ஸ்டாலினின் குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பமாக உள்ளது.
கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் இடம் கொடுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கி இருக்கிறார். இதன்பின் கருணாநிதி குடும்பம் எந்த பதவிக்கும் வர முடியாது. இதுதான் திமுகவுக்கு கடைசி தேர்தல்.. தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். நமக்கு பிரதமர் மோடி துணை நிற்கிறார். நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி, வலிமையான கூட்டணி.
தேர்தல் என்ற போரில் அனைவரும் தேனிக்களை போல் செயல்பட்டு வெற்றிக் கொடி நாட்ட வேண்டும். இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்.. இந்த தேர்தலில் நமது வெற்றிக்கு மக்கள் துணையாக இருக்கிறார்கள். நிச்சயமாக நமது கூட்டணி 210 தொகுதிகளை வெல்லும்.. பெரும்பான்மை இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
மத்திய அரசால் எந்த திட்டமும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியின் போது நாம் கேட்ட நிதியை கொடுத்தார்கள். நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில் திட்டம் அனுமதி, நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு அனுமதி அளித்து நிதி அளித்தார்கள். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக வேண்டுமென்றே பாஜகவை விமர்சிக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications