அதிமுக ஆட்சிக்கு வந்தால்.. திமுகவின் ஹவாலா பணத்தை மக்களுக்கே திருப்பி கொடுப்போம்.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால், திமுக ஆட்சியில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணத்தை கைப்பற்றி மக்களுக்கு கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தல் இது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் சென்னையில் அம்பத்தூர் செங்குன்றம் சாலை பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதில், எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்..

யார் துரோகி? தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்தது திமுக தலைமை தான். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்துள்ளனர். போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. திமுகவின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது தான். திமுக அமைச்சர்கள் ஊழல் மற்றும் ஹவாலா தொடர்பான விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 453 நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது அமைச்சர் கே.என்.நேருவும் ஹவாலா மோசடியில் சிக்கியுள்ளார். அரசு வேலைக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடாக பணியாணை வழங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஹவாலா முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்படும். இப்படி நிதியை திருடி திமுக குடும்பத்திற்கும், ஹவாலா மூலமாக பணத்தை வெளிநாட்டுக்கு திருப்பிவிட்டார்கள். அப்படி முறைகேடாக சம்பாதித்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களிடையே திருப்பி தருவோம்.. அதேபோல் வாரிசு அரசியலை திமுக ஊக்குவித்து வருகிறது.
முக்கியமான பதவிகளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வகித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறலாம்.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும்.. வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு வசதி செய்யப்படும்..
இலவச கேஸ் சிலிண்டர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்.. கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.. குடும்ப ஊழல் ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.. நிர்வாக திறமையற்ற திமுக ஆட்சிக்கு மக்களே முடிவு கட்டுவார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications