எதுகை மோனையில் விளம்பர வசனம்.. நீங்களும் ஒரு குடும்பத் தலைவர் தானே! எடப்பாடி பழனிசாமி ஆவேச அட்டாக்
சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 70 கோடி ரூபாய் என தெரியவந்துள்ள நிலையில், தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக கடல் மார்கமாக இலங்கைக்கு, பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர், குறிப்பாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், கையில் பையுடன் ஒருவர் நின்று இருந்தார். அவரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 கிலோ 970 கிராம் கொண்ட உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது.
விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மத் என்றும், ராமநாதபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் படி, செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர் மற்றும் இப்ராஹிம் ஆகிய 2 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து ₹70 கோடி மதிப்புள்ள 6 கிலோ 920 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் கும்பலை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் திரு. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications