இந்தா வந்துருச்சு கோஷம்- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- தமிழ் மகன் உசேன்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ் என்கிறார் தமிழ்மகன் உசேன்.
சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறையும் வரை அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கப்பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா என கோஷம் மாறியது.
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உருவாக்கினர். அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என அக்கட்சியின் சட்டவிதிகளிலேயே திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளாக பிளவுபட்ட நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி பொதுக் குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.
அப்பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண். 20அ-வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண். 20அ பிரிவு-7ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, கழக சட்ட திட்ட விதி 20அ பிரிவு 7ன்படி, இப்பொதுக்குழு கழக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுகிறார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைகளில் சென்னை உயர்நீதிமன்றமானது, ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது உறுதியானது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் இரு கோஷ்டிகளும் ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக ஒருங்கிணைந்த நிலையில்தான் உள்ளது. அதிமுகவில் பிளவு என்பது எல்லாம் இல்லை. கட்சிக்காக உழைத்தவர்கள் கையில் கட்சியை ஒப்படைத்துள்ளது உச்சநீதிமன்றம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை சட்ட ரீதியாக ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். அதிமுகவின் இனி நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என திட்டவட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications