சென்னையில் உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு தங்க மோதிரம்.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை, இளைஞர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சம்பவம் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணன் என்பவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.
சென்னை அரும்பாக்கம், உத்தாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராபர்ட் என்பவருடைய மகன் செடன் ராயனுக்கு 9 வயது ஆகிறது. சிறுவன் செடன் ராயன் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 16ம் தேதி அன்று பள்ளிக்கு சென்றுவிட்டு அரும்பாக்கம், மங்கள நகர் 1-வது தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் சிறுவன் செடன் ராயன்.

அப்போது சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றபோது, அருகில் உள்ள மின்சார பெட்டியில் இருந்த மின்வயரை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் மாணவன் செடன் ராயன், மழைநீரில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடியபடி இருந்தார்,
அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக கண்ணன் என்ற இளைஞர் வந்து கொண்டிருந்தார். அவர் சற்றும் யோசிக்காமல் கீழே இறங்கி ஓடிவந்து தனது செருப்பை கழட்டினார்.பின்னர் தொடர்ந்து பார்த்த போது ஷாக் அடித்தது. ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை கண்டுபிடித்த இளைஞர் கண்ணன், தண்ணீரை விட்டு வெளியே சென்று ஓரத்தில் நின்றபடி, மழைநீரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மாணவனை லாவகமாக மீட்டார். பின்னர் அவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தார். இதில் கண்ணனுக்கு கையில் லேசான காயம் மட்டும் ஏற்பட்டது.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. எமனிடம் சென்ற சிறுவனை, தனது உயிரை பற்றிக்கூட கலைப்படாமல் இளைஞர் கண்ணன் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், தனது உயிரை பணயம் வைத்து மாணவனை காப்பாற்றிய கண்ணனின் செயலை வெகுவாக பாராட்டினார்கள். கண்ணன் பணியாற்றி வரும் நிறுவனத்தில் சக ஊழியர்கள் அவருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்தார்கள். அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் துணிச்சலை பாராட்டி விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications