அதிமுகவின் அசைக்க முடியாத ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி- ஈரோடு கிழக்கில் இறங்கும் முழு 'பலம்' ?
அதிமுகவை தம் வசமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முழு பலத்தையும் இறக்குவார் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பங்களால் அக்கட்சியின் அசைக்க முடியாத ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். இதனையடுத்து தமது பலத்தை மேலும் உறுதி செய்ய முழு வீச்சில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்கொள்வதற்காக இபிஎஸ் அணி களமிறங்கிவிட்டதாம்.
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என அணிகள் சிதறிக் கிடந்த நிலையில் வாராது வந்த மாமணியாய் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்து சேர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் சரிக்கு சமமாக முட்டி மோதிக் கொண்டிருந்தன.

பாஜகவிடம் ஆதரவு கேட்பது, தேர்தல் பணிக்குழு அமைப்பது, வேட்பாளரை அறிவிப்பது என அத்தனையும் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இரு கோஷ்டிகளும் ரணகளமாகத்தான் மோதி வந்தன. இந்த நிலையில்தான் தீர்ப்புக்காக உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு பெரும் திருப்புமுனையாகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவே முடியாது என்றெல்லாம் மனுத் தாக்கல் செய்தது.
ஆனால் அத்தனைக்கும் இறுதியாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மிகப் பெரும் ட்விஸ்ட்டாக இருந்தது. அதிமுகவின் ஓபிஎஸ்ஸை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வேட்பாளரை தேர்வு செய்யலாம்; அவரை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கலாம் என்றது. அப்புறம் என்ன அதிமுக இபிஎஸ் அணிக்கு சலங்கை கட்டிவிட்டது போல பம்பரமாக சுழன்றது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியோ திக்கு தெரியாத திசையில் தனித்து விடப்பட்டது.

இப்போது அதிமுக இபிஎஸ் அணி அறிவித்த தென்னரசுதான் அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளர்; இரட்டை இலை சின்னமும் அவருக்கே ஒதுக்கப்பட்டுவிட்டது. ஓபிஎஸ் அணியோ தேர்தல் களத்தில் இருந்தே விலகிக் கொண்டுவிட்டது. ஆக அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் என்பதை நிரூபித்துவிட்டதாக இபிஎஸ் அணி குதூகலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் விளையாட தொடங்கிவிட்டது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு, இன்று காலையிலேயே முழு வீச்சில் பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டார். அதிமுகவின் மாஜிக்கள் ஒவ்வொருவரையும் தேர்தல் பணிக்குழுவில் இணைத்த எடப்பாடி பழனிசாமி, செலவு விவகாரங்களையும் அவர்கள் தலையில் கட்டி இருக்கிறார். அத்துடன் அதிமுகவின் ஒற்றை தலைமை தாமே என்பதை நிரூபிக்க தமது தரப்பில் இருந்தும் செலவுத் தொகையை இறக்க சொல்லிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி, அதிமுக இரண்டும் தங்களிடம் உள்ள செலவு பணத்தை அத்தனை வகைகளிலும் முழு வீச்சில் இறக்கிவிடத்தான் போகிறது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு யுத்த களமாக மாறிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications