ஓபிஎஸ்ஸுக்கு எதிராக 3 மேட்டர்களை கையில் எடுத்த ஈபிஎஸ்.. வொர்க் அவுட் ஆன ‘அதிரடி’ அஸ்திரம்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பின் 3 முக்கிய அஸ்திரங்கள் வொர்க் அவுட் ஆகி வருவதால் குஷியாகி இருக்கிறார் ஈபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக முன்னேறி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்துள்ளார்.
ஈபிஎஸ்ஸின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட நினைத்தது ஓபிஎஸ் தரப்பு. ஆனால், அவற்றையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொண்டர்களை ஈர்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் குடைச்சல்
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். இதில் ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில முக்கிய அஸ்திரங்களை கையில் எடுத்தது. அதில் ஒன்று கோடநாடு வழக்கு. கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்ததை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஓபிஎஸ் தரப்பினர், கோடநாடு விசாரணையை முறையாக நடத்த வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்து எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும், இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரிய துருப்பு எதுவும் சிக்கவில்லை.

இன்னொரு துருப்புச் சீட்டு
ஓபிஎஸ் தரப்புக்கு இரண்டாவதாக கிடைத்த துருப்புச்சீட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு. அந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை 11ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால், ஈபிஎஸ் சிக்குவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.

அதிமுக தலைமை அலுவலகம்
மூன்றாவதாக, பொதுக்குழு நடக்கும் நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி, அதிமுகவை முடக்கி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என நினைத்தார் ஓபிஎஸ். அதிமுக அலுவலகம் முடங்கும் விவகாரத்தில் திமுக அரசின் ஆதரவும் தனக்கு கிடைக்கும் என்றும், நீதிமன்றத்தில் சென்று தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று விடலாம் என்றும் கணக்குப் போட்டார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் திட்டம் தோல்வி
ஆனால், அதிமுக தலைமைக் கழக சம்பவம் ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அங்கு ஓபிஎஸ் சென்றபோது நடந்த வன்முறைகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி வசம் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது. மேலும், தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ்ஸுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள், கழகத்தின் கோயிலை சிதைத்து விட்டனர் எனக் குற்றம்சாட்டி ஓபிஎஸ்ஸை கடுமையாக டேமேஜ் செய்து வருகின்றனர்.

தொண்டர்கள் கோபம்
ஈபிஎஸ் தரப்பு ஓபிஎஸ்ஸுக்கு எதிராக 3 முக்கிய அஸ்திரங்களை கையாண்டது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த கழகத்தின் கோயிலை, ரௌடிகளை வைத்து தகர்த்து விட்டார், அலுவலகத்தையே சூறையாடி விட்டார் எனத் தொடர்ந்து பொது வெளிகளில் பேசி வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ்ஸுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி வருகிறது.

அட்டாக் பாணி
அதேபோல, ஓபிஎஸ் திமுக அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், திமுக பன்னீருக்கு உதவி செய்து வருவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் ஈபிஎஸ் தரப்பினர். அதேசமயம், எடப்பாடி தரப்பினர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தொடங்கி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்து வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் திமுகவை வலிமையாக எதிர்ப்பது எடப்பாடி தான் என்ற தோற்றத்தை கட்டமைத்துள்ளது.

ஆர்ப்பாட்டம்
மேலும், மூன்றாவது அஸ்திரமாக சூட்டோடு சூடாக திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார் ஈபிஎஸ். அதன்படி, கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் நல்ல கூட்டம் கூடியிருக்கிறது. இதன் மூலம், தொண்டர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால் உற்சாகமாகி இருக்கிறார் ஈபிஎஸ்.

தொண்டர்கள் அபிமானம்
கட்சியை கைப்பற்றிய கையோடு, தொண்டர்களையும் பங்கேற்க வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது அடிமட்டத் தொண்டர்கள் வரை எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் கூடிய கூட்டம் மூலம், தொண்டர்களின் ஆதரவைத் தன் பக்கம் ஈர்க்க எடப்பாடி பழனிசாமியின் 3 திட்டங்களும் வொர்க் அவுட் ஆகியிருப்பது தெளிவாகிறது என்று குஷியாகிறார்கள் ஈபிஎஸ் ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications