பியூஷ் கோயலுடன் பிரஸ் மீட்! டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு.. சட்டென எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷ்ன்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, என்டிஏ கூட்டணியை பாஜக பலப்படுத்தி வருகிறது. நேற்று இந்த கூட்டணியில் அமமுக இணைந்தது. இந்நிலையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த கால அவகாசம்தான் இருக்கிறது. எனவே பாஜக தனது கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைக்கப்பட்டது.

டைம் லைன் வீடியோ
துரோகியின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்திருந்த, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று, என்டிஏ கூட்டணியில் இணைந்திருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. எடப்பாடி பழனிசாமி குறித்து, டிடிவி பேசியது எல்லாம் டைம் லைனில் வீடியோவாக வெளியாகியிருந்தன.
டிடிவி தினகரன் பேசியது என்ன?
"எங்களுக்கு எதிரி அதிமுக கிடையாது. எடப்பாடி பழனிசாமிதான் எங்களுடைய எதிரி. துரோக மனிதர் அவர்" என்றும், "விஜய்யை கூவி கூவி கூப்பிட்டு பார்த்தார்கள். கரூர் சம்பவத்தை வைத்து பூச்சாண்டி எல்லாம் காட்டினார்கள். ஆனால் விஜய் உறுதியாக இருந்ததால்.. விரக்தி அடைந்து விட்டார்கள். உண்மை என்றைக்கும் கசக்கும், துரோகம் என்றைக்கும் அதன் வேலையை காட்டும். ராயப்பேட்டையில் கடை வைத்திருப்பதை போல.. ஜெயலலிதா படத்தை காட்டி கூட்டணிக்கு அழைக்கிறார்கள்" எனவும் டிடிவி தினகரன் காட்டமான விமர்சனங்களை அடுக்கியிருந்தார்.
கலைந்து சென்ற டிடிவி தினகரன்
இவ்வளவு பேச்சுகளையும் பேசிவிட்டுதான்.. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். நேற்று பியூஷ் கோயலுடன் பிரஸ் மீட்டில், டிடிவி பேசும்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொள்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர். சட்டென உஷாரான கோயல்.. நயினார் நாகேந்திரனை பார்த்து கிளம்பலாம் என சிக்னல் செய்ய.. மொத்த கூட்டமும் கலைந்தது. கூட்டத்தோடு கூட்டமாக டிடிவி தினகரனும் கலைந்து சென்றுவிட்டார்.
சீனுக்குள் வந்த உதயநிதி
இப்படி இருக்கையில் இன்று எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இன்று பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்திருந்த கோயல், எடப்பாடியுடன் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். திமுக மீதும், உதயநிதி ஸ்டாலின் மீதும் கோயல் சரமாரி விமர்சனங்களை அடுக்கினார்.
எடப்பாடியின் ரியாக்ஷன்
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமியும், திமுக மீதும், ஆட்சியாளர்கள் மீதும் விமர்சனம் வைத்திருந்தார். இதனையடுத்து டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு பதில் சொல்லாமல், பிரஸ் மீட்டை முடித்துக்கொண்டார் எடப்பாடி. அவரது ரியாக்ஷன் விவாதங்களை தூண்டியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் வார்த்தையில் கவனம்
ஏனெனில், டிடிவி என்டிஏவில் இணைந்ததற்கு எடப்பாடி வாழ்த்து சொல்லியிருந்தார். இந்த வாழ்த்து குறிப்பில், "புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். அதாவது டிடிவி எங்களுடன் இணையவில்லை, என்டிஏ-வில் தான் இணைந்துள்ளார் என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
இப்படி இருக்கையில் டிடிவி குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவியிருப்பதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications