ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. டக்கென கையில் எடுத்த எடப்பாடி.. உண்மையை ஓபனாக சொல்லிட்டாராம்!
சென்னை: ரஜினிகாந்த் பேசியதில் ஒரு விஷயம் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், வெளியில் திமுகவும் பாஜகவும் எதிரி போல் தோற்றம் அளிக்கிறார்கள் ஆனால் உள்ளே உறவு வைத்துள்ளார்கள். ரஜினிகாந்த் இந்த விஷயத்தை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குறித்து தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

ரஜினி பேசிய முக்கியமான விஷயம்: இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி கலைஞர் போல ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது இல்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து நாணயம் வெளியீட்டு விழாவில் கலைஞர் குறித்து அரை மணி நேரம் பேசியிருக்கிறார் என்று சொன்னால் அது மேலிடத்தின் உத்தரவாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பேட்டி: இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவரிடம், ரஜினிகாந்த் "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து அரை மணி நேரம் பேசியது மேலிடத்தின் உத்தரவாகத்தான் இருக்கும்" என நேற்று பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
ரஜினி போட்டு உடைச்சிட்டாரு: அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "வெளியில் திமுகவும் பாஜகவும் எதிரி போல் தோற்றம் அளிக்கிறார்கள் ஆனால் உள்ளே உறவு வைத்துள்ளார்கள். திமுகவும் பாஜகவும் நாடகம் ஆடுகிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். வெளிப்படையாக பாஜக திமுக உறவை சொன்ன ரஜினிகாந்துக்கு நன்றி. திமுக அரசு மீது ஆளுநரிடம் பாஜகவினர் மூன்று முறை ஊழல் பட்டியல் கொடுத்தார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்ணாமலை மீது தாக்கு: அதிமுக ஊழல் ஆட்சி மோசமான ஆட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அதிமுகவுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்ட போதெல்லாம் இது தெரியவில்லையா? அதிமுக ஆதரவுடன் பல்வேறு மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றிய போதெல்லாம் இது தெரியவில்லையா? எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எங்கள் ஆதரவால் தான் இன்று பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்." எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications