8 மாதங்களில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும்.. அடித்துச் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னை: 8 மாதங்களில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை, அதில் அதிமுக தலையிட விரும்பவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதற்கான காரணத்தை அவர்தான் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதிமுக தரப்பில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாகக் கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், 2ஆம் கட்டமாகத் தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்பாக நூற்றுக்கணக்கான மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் இன்று அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
எம்ஜிஆரை பேசுவதற்குத் தகுதி வேண்டும். எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள். அப்படியானவர்களை விமர்சனம் செய்தால், திருமாவளவன் அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார். அதேபோல் அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஒரு சாதியை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்வது இயலாத விஷயம். அனைத்து சாதிகளும், மதங்களும் அதிமுகவில் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம்.
சில பேருக்கு அது பொறுக்கவில்லை.. எரிச்சல்.. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.. அதன் வெறுப்பின் வெளிப்பாடே இப்படியான கருத்துக்களுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. அந்த கூட்டணி இன்னும் 8 மாதங்களுக்கு நிலைக்குமா, நிலைக்காதா விரைவில் தெரியும்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. அந்த 8 மாதங்களில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும். கூட்டணி அமைந்த பின் அனைவரையும் அழைத்து அறிவிப்போம். பாமகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுக எப்போதும் அப்படி கருத்துச் சொன்னது கிடையாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதற்கான காரணத்தை அவர்தான் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரம்மாண்ட கட்சி ஒன்று கூட்டணிக்கு வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதன்பின் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறி இருந்தார். தற்போது சிறப்பான கூட்டணி அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications