ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. தமிழக அரசுக்கு எதிராக புகார் மனு
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.
Recommended Video
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அண்மையில் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரை இன்று சந்தித்தார். சந்திப்பு காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அரசியல் விவகாரம்
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி புகார் அளித்துள்ளார்.

புகார்கள்
அதிமுக பூத் ஏஜெண்டுகளைப் பல இடங்களில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழையவே விடவில்லை என்று புகார்கள் எழுந்தன. இது குறித்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் அறிக்கை வெளியிட்டிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், ஐ.பெரியசாமி ஆகியோர் அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு தனது காரை அதிமுகவினர் மீது ஏற்ற முற்பட்டார் என்றும் அதிமுக தரப்பில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகார் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓபிஎஸ் இல்லை
இந்த விவகாரங்கள் குறித்தும் ஆளுநரிடம் புகார் பட்டியல் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருக்கவில்லை. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்று ஆளுநரை சந்திக்கவில்லை என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், முன்னாள் அமைச்சர்களான, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் சீனியர் தலைவர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனுள்ளனர்.

தொண்டர்கள்
140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்ததை அக்கட்சித் தொண்டர்களால் இன்னமும் ஏற்க முடியாமல்தான் இருக்கிறது. அதிமுகவின் இரட்டை தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான அதிகார மோதல் அக்கட்சி தொண்டர்களை மிகவும் சோர்வடைய செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி அறசியல்
இந்த நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக பொன்விழா ஆண்டு களைகட்டவில்லை. கட்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களுக்கு பெருந்திரளாக தொண்டர்கள் சென்னையில் திரளவும் இல்லை. ஏன் மாநில நிர்வாகிகள் பலரும் கூட தங்களது மாவட்டங்களிலேயே இருந்து கொண்டு அதிமுக கொடி ஏற்றி கடமையை முடித்துக் கொண்டனர். இந்த நிலையில் தீவிர அரசியல் முன்னெடுப்புகளை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக தலைமை ஆளுநர் மாளிகை நோக்கி விரைவதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications