எடப்பாடி பழனிசாமியின் 5ஆம் கட்ட சுற்றுப் பயணம் 17இல் தொடக்கம் - அதிமுக அறிவிப்பு
சென்னை: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு சில மாதங்களே உள்ளன. அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றி அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, வருகிற 17-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக கூட்டணி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதிமுக சார்பில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.

செங்கோட்டையன் நீக்கம்
மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேறிவிட்டனர். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், 10 நாட்கள் கெடு விதித்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுக அறிவிப்பு
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், செங்கோட்டையன் நீக்கம், பாஜகவில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் விலகல் என அடுத்தடுத்து எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியின் 5 ஆம் கட்ட சுற்றுப் பயணம் குறித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி சுற்றுப் பயணம்
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, எடப்பாடி பழனிசாமி 17 ஆம் தேதி தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், 18 ஆம் தேதி பாலக்கோடு, பென்னாகரம், 19 ஆம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம், 20 ஆம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர், 21 ஆம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், 23 ஆம் தேதி குன்னூர், உதகமண்டலம், 24 ஆம் தேதி கூடலூர், 25 ஆம் தேதி வேடசந்தூர், கரூர் 26 ஆம் தேதி அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார்.
ஏற்பாடுகள்
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். எழுச்சி பயணத்தின்போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications