வீடு தேடி வந்த எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள்.. "ஓபிஎஸ் வாழ்க".. கோஷமிட்ட ஆதரவாளர்கள்!
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் , ஓபிஎஸ்ஸை சந்திக்க வந்தபோது அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வாழ்க என்று கோஷமிட்டதால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டதாம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்; இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்ற நிலை இருந்த போதும் யார் கை ஓங்குவது என்பதில் இருதரப்பும் இடைவிடாமல் மோதிக் கொண்டே இருக்கிறது. இதனை பூசி மெழுகுவதற்காக அவ்வப்போது இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு தொண்டர்களை நம்ப வைத்தும் வருகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு
இந்த நிலையில்தான் மேற்கு மாவட்டங்களில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு ஒன்று ஓபிஎஸ்ஸை சந்திக்க அவரது வீட்டுக்குப் போனது. ஓபிஎஸ்ஸை சந்தித்து சில விஷயங்களை வெளிப்படையாக மனம்விட்டு பேசி சமாதானப்படுத்தும் நோக்கத்தில் இந்த குழு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவு கோஷம்
ஆனால் இந்த எம்.எல்.ஏக்கள் குழு ஓபிஎஸ் வீட்டில் கிட்டத்தட்ட சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக ஓபிஎஸ்ஸை சந்திக்க முடியாமல் வெளியேயே காத்திருந்ததாம். அப்போது திடீரென ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் வரும்போதே ஓபிஎஸ் வாழ்க! கட்சியை காப்பாற்றும் காவல்தெய்வமே வாழ்க! என்று எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முன்னிலையிலேயே கோஷம் போட்டுக் கொண்டே ஓபிஎஸ் வீட்டுக்குள் நுழைந்து அவரை சந்தித்து பேசியிருக்கின்றனர்.

ஓபிஎஸ் சொன்ன பதில்
இப்படி ஒரு மணிநேரம் போன பின்னர் வெளியே வந்திருக்கிறார் ஓபிஎஸ். அப்போது எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள், உங்க கிட்ட கொஞ்சம் பேசிட்டு போலாம்னு வந்தமுங்கண்ணா என பவ்யமாகவே சொல்லி இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ்ஸோ, எங்ககிட்ட ஆலோசனை செய்ய என்ன இருக்கிறது? என பொதுவாக கேட்டாராம்.

சரியான ரெஸ்பான்ஸ் இல்லையே..
அத்துடன் நிற்காமல், எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு.. இன்னொரு நாள் சந்திக்கலாம் எனவும் சொன்னாராம் ஓபிஎஸ். அப்படி சொன்ன கையோடு வீட்டில் இருந்து புறப்பட்டும் விட்டார். சரிவர ரெஸ்பான்ஸ் கிடைக்காததைப் பார்த்த மேற்கு மண்டல எம்எல்ஏக்கள் புலம்பியபடி அங்கிருந்து புறப்பட்டுப் போனார்களாம்.












Click it and Unblock the Notifications