சென்னையில் ஓபிஎஸ் உடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு! சசிகலாவுடன் கை கோர்ப்பதை தடுக்க தீவிரம்!
சென்னை: சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சசிகலாவுடன் ஓபிஎஸ் கை கோர்ப்பதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கின்றன அதிமுக தகவல்கள்.
Recommended Video
சென்னையில் அரசு பங்களாவை காலி செய்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை தியாகராயநகரில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வீடு உள்ள பகுதியில் குடியேறி உள்ளார். இந்த வீட்டுக்கான பால்காய்ச்சுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த வீடு சசிகலா தற்போது தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில்தான் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்களுடன் தனியே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி செய்த தவறுக்கு என்ன செய்ய முடியும்?.. ஜெ. அளவுக்கு கட்சியை உயர்த்தலாம்.. சசிகலா ஆடியோ
சசிகலாவுக்கு நோ இடம்
ஆனால் இந்த ஆலோசனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நல்ல நாள் என்பதால் கட்சி அலுவலகத்துக்கு பலரும் வந்திருந்தனர். அவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஓபிஎஸ் வீட்டில் பால் காய்ச்சுகிறார். அதனால் அவர் வரவில்லை என்று கூறினார். அத்துடன் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாகவும் எடப்பாடி நேற்று தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ்- உடன் சந்திப்பு
புதுவீட்டு பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில் தனியார் நட்சத்திர விடுதியில் ஓபிஎஸ் தங்கி இருக்கிறார். இந்நிலையில் திடீரென ஓபிஎஸ்ஸை தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி
மேலும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி, கொறடா ஆகியவை தொடர்பாகவும் விவாதித்தனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி இருக்கிறது. அதேபோல் கொறடா பதவியை ஈபிஎஸ் அணி எடுத்துக் கொள்வது எனவும் முடிவு செய்துள்ளதும் ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாதான முயற்சிகள் தீவிரம்
இது தொடர்பாக நாம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, சசிகலா பக்கம் ஓபிஎஸ் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் விருப்பம். இதனைத் தடுக்க கூடுமானவரை ஓபிஎஸ்ஸை தடுக்க முயற்சிக்கிறார். ஓபிஎஸ்-க்கு கட்சியில் செல்வாக்கு இல்லவே இல்லை என்பது எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என நினைக்கிறார் ஈபிஎஸ். ஏனெனில் எந்த செல்வாக்கும் இல்லாத நிலையில் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் என கிளம்பிவிட்டால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் அபாயம் உள்ளது. கட்சியும் மீண்டும் இரண்டாக உடையும் நிலை உருவாகும். இத்தகைய விபரீதங்கள் ஏற்படாமல் இருக்கவே எடப்பாடி பழனிசாமி சமாதான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் என்கின்றனர்.