வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆஃபரை அள்ளித் தரும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட கலை திருவிழாவில் முதல் 20 இடங்களைப் பெறக்கூடிய மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டம் அரசு சார்பில் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை விழா ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிக்கூடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி பள்ளிக்கல்வித் துறையானது பல்வேறு வகைகளிலும் மாணவர்களின் அறிவுத்திறனையும், கலைத்திறனையும் ஊக்கப்படுத்தி வருகிறது. 13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்புவரை பயிலக்கூடிய 28 லட்சத்து 53 ஆயிரத்து 882 மாணவர்களை, 206 வகையிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து, மாபெரும் விழாவாக, இதை உருவாக்கி இருக்கக்கூடிய தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

தன்னம்பிக்கை பெறுவார்கள்
பாடம், பாடப்புத்தகம், வகுப்பறை ஆகியவற்றைத் தாண்டி, கற்பித்தல் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்தி வருகிறது. நமது மரபார்ந்த கலைகளை மாணவர்கள் நெஞ்சில் விதைப்பதை நான் பாராட்டுகிறேன். பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் தன்னம்பிக்கை பெறுவார்கள்.

வெளிநாடு சுற்றுலா
கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் கலையரசன், கலையரசி பட்டம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதல் 20 இடங்களைப் பெறக்கூடிய மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ளதுடன் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

புதுமைப் பெண் திட்டம்
இல்லம் தேடிக் கல்வி, எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்', பள்ளி மேலாண்மைக் குழுக்கள், எண்ணும் எழுத்தும், ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே புது எழுச்சியை உருவாக்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்லாயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

24 மணி நேரமும்
மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கக்கூடிய நோக்கத்தோடு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டணமில்லா தொலைபேசிச் சேவை 14417 ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் ஆர்வத்தை உருவாக்க, 13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளில் 'வானவில் மன்றம்' தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பகுத்தறிவு அவசியம்
ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். உங்களது அறிவு கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாக வளர வேண்டும், வளர வேண்டும் என்று உங்கள் அத்தனை பேரையும் நான் மனதார மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விடை பெறுகிறேன்.












Click it and Unblock the Notifications