எலியை கவ்விகிட்டு ஏசி இயந்திரத்தில் புகுந்த நல்லப் பாம்பு.. 66 வயது முதியவர் பலி.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் நல்லப் பாம்பு கடித்து 66 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை வ.உ.சி தெரு சிண்டிகேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஶ்ரீதரன்(66). அவரது மனைவி, மகன் மற்றும் மகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் ஶ்ரீதரன் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து இறந்து போன எலியானது கட்டில் மேலே விழுந்துள்ளது. பின்னர் ஶ்ரீதரன் அந்த ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார்.

மின்சார வயர்
அப்போது ஏதோ வயர் போல் கையில் சிக்கியது. இதனால்அது மின்சார வயராக இருக்கும் என நினைத்து இழுத்துள்ளார். ஆனால் அதன் உள்ளே இருந்தது மின்சார வயர் இல்லை. நல்லப் பாம்பு... சுதாரிப்பதற்குள் அந்த பாம்பு அவரது கையில் இரு விரல்களில் கடித்துவிட்டது. பின்னர் வலியால் துடித்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

தீவிர சிகிச்சை
அங்கு அவரது நிலை மோசமாக இருந்ததால் அனுமதிக்க மறுத்த தனியார் மருத்துவமனை அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டது. இதையடுத்து உடனே அந்த மருத்துவமனைக்கு ஸ்ரீதரனை அழைத்து வந்து அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பள்ளிக்கரணை
எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 4.30 மணி அளவில் உயிரிழந்துவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர் உடலை குரோம்பபேட்டை அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

அதிர்ச்சி
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஶ்ரீதரனை கடித்த நல்லப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துச் சென்றனர். ஏசி இயந்திரத்தில் இருந்து வந்த பாம்பு கடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

அடித்து வரப்பட்ட பாம்பு
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்கு பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்ததாக மக்கள் தெரிவித்திருந்தனர். ஸ்ரீதரனின் வீடு பள்ளிக்கரணையில் இருந்ததால் மழை வெள்ளத்தில் அடித்து வந்த பாம்பு உயிர் பிழைக்க ஏசி இயந்திரத்தில் சென்றிருக்கும். அப்போது அதன் தீனியாக எலி சிக்கியிருக்கும். இதனால் ஏசி இயந்திரத்தில் செட்டிலான பாம்பு முதியவரை கடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மழைக்காலம் முடிந்தவுடன் ஏசி இயந்திரங்களை சில நாட்களுக்கு இயக்காமல் இருப்பது நல்லது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications