சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை: வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. ஆனால் தமது வேட்பு மனுவில் எடப்பாடி பழனிசாமி சொத்து விவரங்களை மறைத்து காட்டியுள்ளார் என வழக்கு தொடரப்பட்டது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 26-ந் தேதி விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே தம் மீதான சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் தமக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரும் அல்ல; எதிர்த்துப் போட்டியிட்டவரும் அல்ல. எந்த ஒரு தவறான தகவலும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படவும் இல்லை. ஆகையால் சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையின் போது சேலம் நீதிமன்றம் நடத்தும் எடப்பாடி வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுமா? இல்லையா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications