தேர்தல் முடிந்ததும் உயர்ந்த சிலிண்டர் ரேட்.. எலக்ஷன் பில் இதுதாங்க.. ஸ்டாலின், ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு முதல்வர் முக ஸ்டாலின், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று காலையில் அதிகாலையில் அதிரடியாக உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.993 வரை உயர்ந்தது.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ.3,0715.50 க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.3,024க்கும், பெங்களூரில் ரூ.3,154க்கும், சென்னையில் ரூ.3,237 க்கு விற்பனையாகி வருகிறது.அதேவேளையில் வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. இந்த சிலிண்டர் ஒன்று ரூ.913 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
உணவு விலை உயரும் அபாயம்
இருப்பினும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டு இருப்பது வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஹோட்டல்கள், டீக்கடைகளில் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உடனடியாக இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி போட்ட பதிவு
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ''தேர்தலுக்கு பிறகு விலைவாசி உயர்வு தெரியவரும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் உயர்ந்த அதிகபட்ச விலையாக இது உள்ளது. இது தேர்தலுக்கான பில்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்போது வரை ரூ.1,380 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 3 மாதங்களில் 81 சதவீத உயர்வாகும். டீக்கடை, தாபா, ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் கடைகள் உள்பட அனைவரின் சமையலறையில் சுமை அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு அடுத்து உங்களின் உணவு தட்டுகளில் எதிரொலிக்கும். இப்போது முதலாவதாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்'' என கடிந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,''மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்! தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை.
இப்போது WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.இந்த LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications