காத்திருப்பு ஓவர்.. புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. விரைவில் முக்கிய அறிவிப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடைபெற்று வந்தது.
அரசியல் கட்சிக்கொடிக்கம்பங்கள், தொழிற்சங்கங்களின் கொடிக்கம்பங்கள் துணி மற்றும் சாக்குகளால் மூடி, கட்டி வைக்கப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ அலுவலகங்கள் மூடப்பட்டு, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் எண்ணும் பணி கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்புடன் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையைப் பொறுத்தவரை, மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியிலும், வட சென்னை தொகுதி வாக்குகள் இராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு விலகிக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியிடப்பட்டுவிட்ட போதும், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இருக்காது.
2 மாத காலத்திற்கும் மேலாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பல்வேறு பணிகள் தடைபட்டிருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடாமல் இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அறிவிப்பு வெளியாகவில்லை.
அடுத்த ஒரு சில நாட்களில் விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், அதன் பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். எனவே ஜூலை மாத மகளிர் உரிமைத் தொகைக்கான பணம் புதிதாக இணைய உள்ளவர்களுக்கும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களும் பல மாதங்களாக அட்டைகள் கிடைக்கப்பெறாமல் இருந்தனர். மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், விரைவில் புதிய ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications