குபேரர்களின் கோட்டை? ஜஸ்ட் 45 நாளில் தமிழகத்தில் ரூ.1,309 கோடியை அள்ளிய தேர்தல் ஆணையம்! அடேங்கப்பா
சென்னை: கடந்த மாதம் 16ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது வரை தமிழகத்தில் ஆவணங்களின்றி சிக்கிய பொருட்களின் மதிப்பு 1,300 கோடியை கடந்து சென்று கொண்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
நம் நாட்டில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16ம் தேதி அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

அதன்பிறகு 2வது கட்ட தேர்தல் பிற மாநிலங்களில் நடந்தது. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் மே 7, மே 13, மே 20, மே 25, ஜுன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டி உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் மொத்தமாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுவிட்டன. உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும், பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொகுதி வாரியாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது ரொக்கப்பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிவடைந்தாலும் கூட அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் மாநில எல்லைகளில் பறக்கும்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் நேற்ற வரை மொத்தம் 45 நாளில் தமிழகத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்த விபரத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை இணைந்து ரூ.1,309.52 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. இதில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.1,083.78 கோடியாகும். அதாவது ரூ.50 ஆயிரத்துக்கு மேலாக ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணமும், வீடுகளில் கணக்கில் இல்லாமல் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க வைத்த பணத்தையும் தான் பறக்கும் படை மற்றும் ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் தான் ரூ.1,083.78 கோடி ரொக்கப்பணமாக சிக்கி உள்ளது.
மேலும் பணத்தை தவிர ரூ.179.91 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.8.65 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.1.36 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.35.8 கோடி மதிப்பிலான இலவச பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications