மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் ஆணை!
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி 48 மணிநேரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19 மாலை 6 மணி வரை மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவான மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்போது 48 மணி நேரமும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்படும்.
முன்னதாக, தேர்தல் ஆணைய விதிமுறைப்படி நாடாளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்பதும் அடக்கம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காலங்களில் டாஸ்மாக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் மது வகைகள் இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்தில் மது விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 30 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும்.
எனவே கடையின் சராசரி விற்பனை 30 சதவீதத்துக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்கக்கூடாது. ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் விற்கக்கூடாது. அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே மதுக்கடைகள் இயங்க வேண்டும். பார்களில் மதுபானம் இருக்க கூடாது, அப்படி இருந்தால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications