தமிழகத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்.. 6.10 கோடி வாக்காளர்கள்.. ஆண்களை விட பெண்கள் அதிகம்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று வெளியிட்டார்.
Recommended Video
இதையடுத்து மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

விண்ணப்பங்கள்
அந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் அனைத்து வேலை நாட்களிலும் கொடுக்கலாம். வரும் 21, 22ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம்.

பெயர் சேர்ப்பு
இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5ம் தேதியன்று இறுதி செய்யப்பட உள்ளது. ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது.

பெண்கள் வாக்குகள் அதிகம்
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 கோடியே 9 லட்சத்து, 25,603 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 3 கோடியே ஒரு லட்சத்து 12,370 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 6,385 மூன்றாம் பாலினத்தவர் வாக்குகள் உள்ளன.

சோழிங்கநல்லூரில் அதிகம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications