Election Exclusive: எடப்பாடியே எழுந்து நிக்கனும்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் தரும் உட்சபட்ச ஆஃபர்! சபாநாயகர் ஆகப் போறாரா?
சென்னை: திமுகவில் அரசியலை ஆரம்பித்து எம்ஜிஆர் மூலம் அதிமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக இருந்தவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என ஸ்டாலின் நினைப்பதாகவும், அதற்காகத்தான் இந்த மெகா ஆஃபரை தந்து இருப்பதாக தேனி வட்டாரங்கள் சொல்லுகின்றன.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் குடும்பத்துடன் பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வந்தவர். பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டு எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார்.
கட்சியின் அமைப்பில் நகர மட்டப் பொறுப்புகளில் இருந்து தொடங்கி, மாவட்ட அளவிலான பொறுப்புகள் வரை வகித்த அவர், 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓபிஎஸ் திமுக
அதே ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சட்ட நெருக்கடி காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளில் அவர் மீண்டும் முதல்வராக பதவி வகித்தார். இதன் மூலம் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற சிலரில் ஓபிஎஸ்ஸும் ஒருவராக அறியப்படுகிறார்.
ஓ பன்னீர்செல்வம்
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் தலைமை மாற்றங்களின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுத்தார். கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், பின்னர் நடந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஆகியவற்றின் விளைவாக அவர் துணை முதலமைச்சராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். எனினும் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுக உட்கட்சி அரசியல்
அதனைத் தொடர்ந்து அவர் சட்டரீதியான போராட்டங்களையும் அரசியல் முயற்சிகளையும் மேற்கொண்டார். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கிடையில் அவரது ஆதரவாளர்களில் சிலர் வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தனர். இந்த சூழலில், அரசியல் நிலைமாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது மகனான முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஸ்டாலின் முடிவு
இந்த இணைவு தேனி மாவட்ட அரசியல் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த அனுபவமுள்ள தலைவர், நீண்டகாலம் எதிரணியாக இருந்த திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அவரது வருகை நன்மை பயக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஓபிஎஸ் சபாநாயகர்
இந்த நிலையில் திமுகவில் இணைந்திருக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு உடனடியாக கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுகவின் பொருளாளர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என உச்சபட்ச பதவிகளை வகித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாவட்ட பொறுப்பு வழங்குவது மரியாதை குறைவாக இருக்கும் என்பதால் அவரை திமுக துணை பொது செயலாளர் அறிவிக்க ஸ்டாலின் உறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
திமுக ஆட்சி
அந்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம். மேலும் திமுக ஆட்சி அமைந்தால் ஓ பன்னீர் செல்வத்திற்கு மிகப்பெரிய கௌரவமாக சபாநாயகர் பதவியை தர ஸ்டாலின் முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னாள் முதல்வர் என்பதால் இந்த முடிவை ஸ்டாலின் எடுத்திருக்கிறார் என்கின்றனர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். திமுக ஆட்சி அமைந்ததும் சபாநாயகராக ஓ.பன்னீர்செல்வத்தை அறிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications