ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு?
சென்னை: விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திப்பது நிர்வாகத்திற்கு பலன் தரும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.. மேலும், ஸ்டாலின் ஆட்சியை இழந்ததற்கான காரணங்களையும், தற்போது விஜய் அரசு எதிர்கொள்ளும் சவால்களையும் பேட்டி ஒன்றில் விரிவாக அலசியுள்ளார் மணி,
ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "ஒரு பெண்ணிற்கு குங்குமம் எத்தகைய அடையாளமோ, அதுபோலவே ஒரு அரசின் செயல்பாட்டிற்கு சட்டம் ஒழுங்கு தான் மிக முக்கியமான அடையாளம்.. இது ஒரு பொதுவான உதாரணம் மட்டுமே. இதைப் பெண்ணியவாதிகள் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும், அரசின் நிலையை எளிதாகப் புரிந்துகொள்ளள இதை சொல்கிறேன்.

ஹனிமூன் பீரியட்
சென்னையில் ஏற்பட்ட மின்வெட்டு என்பது மின்சாரத் தேவை அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளது..இதில் விஷமிகள் ஏதேனும் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.. மின்வெட்டை விட சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுதான் மிக முக்கியம் என்பதால், இந்த அரசுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வேண்டியருக்கிறது.
இந்த அரசுக்கு மூன்று மாதங்கள் அல்லது குறைந்தபட்சம் ஹனிமூன் பீரியட் என்ற கால அவகாசம் கூட தரமாட்டோம் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.. குறிப்பாக திமுக, 30 நிமிடத்திற்கு ஒரு அறிக்கை, 3 நிமிடத்துக்கு ஒரு ட்வீட் என்று தொடர்ந்து அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.. திமுக தனது தோல்வியில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.. எந்தவொரு புதிய அரசுக்கும் குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவை.
அமைச்சர்களின் சிரிப்பு
அதேபோல முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் உயர் அதிகாரிகளும், மற்ற அனைத்து விஷயங்களை விடவும் சட்டம் ஒழுங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவது அவர்களுக்கே நல்லது.. எனவே சற்று பொறுமை தேவை.
அரசு தரப்பிலிருந்து முறையான தகவல் தொடர்பு இல்லாதது ஒரு குறையாக உள்ளது.. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கவில்லை. அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேட்டி அளிக்கும்போது சிரிப்பது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.. இதுபோன்ற போக்குகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அரசின் சார்பில் யார் பேசப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.. முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆபத்தானது. கட்சி ஆரம்பித்து 27 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தது ஒரு மாபெரும் சாதனை என்றாலும், என்.டி. ராமாராவ் போன்றவர்கள் ஆட்சியில் இருந்தபோது தொடர்ந்து செய்தியாளர்களுடன் தொடர்பில் இருந்ததை நாம் பார்க்க வேண்டும்
விஜய் காதுக்கு போகும் தகவல்கள்
விஜய்க்கு அதிகாரிகள் மட்டுமே தகவல்களைத் தருகிறார்கள் .. இது மிகவும் ஆபத்தான போக்கு.. எந்த முதலமைச்சராக இருந்தாலும், அதிகாரிகள் எல்லா உண்மைகளையும் முதலமைச்சர் காதுக்குக் கொண்டு செல்ல மாட்டார்கள்.. முதலமைச்சருக்குத் தகவல்களைச் சரிபார்க்க அதிகாரிகளைத் தவிர வேறு சில நம்பகமான ஆதாரங்கள் இருப்பது அவசியம்.. எனினும் மீடியா மற்றும் செய்தியாளர்களைச் சந்திப்பதன் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது.
ஸ்டாலின் ஆட்சியை இழந்ததற்கான காரணம், அரசுக்கு எதிரான தகவல்கள் அவர் காதுக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டதுதான்.. திமுகவினர் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. தற்போதைய அரசியல் சூழலில் விஜய் அரசின் மிகப்பெரிய நெருக்கடி என்னவென்றால், அவருக்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி இருப்பதுதான்.
ஸ்டாலின் அதிர்ஷ்டசாலியான முதலமைச்சர்
ஸ்டாலின் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியான முதலமைச்சராக இருந்தார், ஏனெனில் அவருக்கு எதிர்க்கட்சியே சுத்தமாக இல்லை.. எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த சூழலை விட, ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு அமைந்தது.. ஆனால், இன்று முதலமைச்சர் விஜய்க்கு வலுவான ஒரு எதிர்க்கட்சி இருக்கிறது.. அது திராவிட முன்னேற்றக் கழகம்.
எனவே இந்த இடத்தில் விஜய் அரசு கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.. அவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றால், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதை யாராலும் தடுக்க முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications