இனி உரசுனா.. 5 நிமிஷத்தில் போலீஸ் தூக்கிடும்! சென்னை பஸ்களில் வரும் அவசர "பட்டன்".. மாஸ் அறிவிப்பு
சென்னை: பஸ்களில் இனி ஆண்கள் உரசினாலோ, பாலியல் தொந்தரவு கொடுத்தாலோ போலீஸை பெண்கள் அழைப்பதற்கு அவசர பட்டன் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சோதனை முயற்சியாக முதன்முதலில் சென்னையில் உள்ள பஸ்களில் இந்த அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்னர், மற்ற மாவட்டங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வசதி மூலம், பஸ்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வக்கிர புத்தி ஆண்கள்
பஸ்களில் செல்லும் பெண்கள் தினம் தினம் படும் அவஸ்தைகளில் ஒன்றாக இருப்பது ஆண்களின் பாலியல் தொந்தரவு. கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொள்ளும் ஆண்கள் சிலர், பெண்களிடம் தங்கள் வக்கிரத்தை காட்டி வருவது வாடிக்கையாகிவிட்டது. ஒருசில பெண்கள் மட்டுமே ஆண்களின் இந்த செயல்களை துணிச்சலாக தட்டிக் கேட்கிறார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் பயந்துகொண்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். இது, அந்த வக்கிர புத்தி கொண்ட ஆண்களுக்கு வசதியாகி விடுகிறது.

வந்துவிட்டது 'அவசர பட்டன்'
இந்நிலையில், பஸ்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவை ஒழிக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை மாநகர பஸ்களில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்களில் பயணம் செய்யும் போது ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொந்தரு செய்தாலோ பெண்கள் இந்த அவசர பட்டனை அழுத்தலாம்.

போலீஸாருக்கு கிடைக்கும் சிக்னல்
இவ்வாறு அந்த பட்டனை அழுத்துவதால் எந்த சத்தமும் வராது. ஆனால், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்த சிக்னல் கிடைத்துவிடும். மேலும், அது என்ன பஸ், தற்போது அது எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் போலீஸாருக்கு ஜிபிஎஸ் மூலம் தெரிந்துவிடும். இதையடுத்து, ஒருசில நிமிடங்களிலேயே அந்த பஸ்ஸில் போலீஸார் ஏறி, பாலியல் தொந்தரவு தரும் நபரை பிடித்து சென்று விடுவார்கள்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
தற்போது முதல்கட்டமாக, சென்னையில் 1200 போக்குவரத்துக் கழக பஸ்களில் இந்த அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களில் இந்த அவசர பட்டன்கள் பொருத்தப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த அவசர பட்டனை எப்படி இயக்குவது, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications