காலியாகும் டெபாசிட்.. கவலையில் வங்கிகள்.. ரெப்போ வட்டியை குறைக்காத ஆர்பிஐ: மர்மம் என்ன?

விலைவாசி உயர்வு அதிகம் இருப்பதால், ரிசர்வ் பேங்க் தனது ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கடந்த மாதம் முதலே கருத்து கூறிவந்த நிலையில், ஆர்பிஐயின் இந்த அறிவிப்பு பலரின் கனவை காலி செய்துள்ளது. குறிப்பாக வீட்டுக்கடன், பர்சனல் லோன் என வாங்கி வைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் குறைக்காமல் அப்படியே வைத்துள்ளது. 4% ஆக இருந்த வட்டி விகிதத்தை உயர்ந்தும் போது மட்டும் வேகவேகமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ஆனால், குறைக்கும் போது அதே நடைமுறை கையாளப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இப்படியே போனால், நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் எகிறிவிடும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்காமல் அப்படியே தொடர்வதற்கான தேவை என்ன? அதில் மறைந்துள்ள மர்மம் என்ன? இது பற்றி பங்குச் சந்தை ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர் இது பற்றிப் பேசுகையில், “வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இது நல்ல செய்தியா என்றால் நிச்சயம் கிடையாது. முன்னதாகவே வீட்டுக்கடன் வட்டியை ஏற்றிவிட்டார்கள். வட்டி விகிதம் ஏறும்போது நாம் முன்பே தீர்மானித்த வருடங்களின் வரம்பும் உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே கார் மற்றும் வீடு, பர்சனல் லோன் வாங்கியவர்களின் வட்டி விகிதம் குறையப்போவதில்லை. ஆகவே, இதில் சந்தோசப்பட்டும் அளவுக்கு ஒரு செய்தியும் இல்லை. கடந்த ஒன்றைரை வருடமாக இந்த 6.5% வட்டி விகிதம் அப்படியே தொடர்ந்து வருகிறது. அதற்குக் காரணம் விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. போக்குவரத்து செலவு கூடிக்கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் உயர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.
பெட்ரோல், டீசல் விலை வர்த்தக சந்தையில் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசு அதன் வரியைக் குறைக்கவில்லை. இதனால் விலையையும் குறையவில்லை. அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் வேண்டும் என்பதால் மக்கள் தலையில் விலைவாசி குறைந்தும் வரியைச் சுமத்தினார்கள். கூடவே உள்கட்டுமான வரி எனப் போட்டு லாபம் முழுவதையும் மத்திய அரசே உறிஞ்சி எடுத்துக்கொண்டது. கடந்த 2 மாதங்கள் முன்பாகக் கூட கச்சா எண்ணெய் விலை கடுமையாக இறங்கியது. அப்படி இருந்தும் விலையை அரசு குறைக்கவில்லை.
வட்டி விகிதம் குறைக்கப்படாததால் கார் மற்றும் பைக் விற்பனை நிறையக் குறைந்துள்ளது. அரசு வட்டியில் மட்டும் கை வைக்கவில்லை. பணமாகச் செலவு செய்வது குறைந்துவிட்டது. இதனால் வங்கிகளில் வைப்புத் தொகை குறைந்துவிட்டது. யாரும் பணம் போட முன்வரவில்லை. மக்கள் வங்கியில் டெபாசிட் செய்தால்தான் அதை வைத்து கடன் கொடுக்க முடியும். வங்கி டெபாசிட் செய்யும் தொகைக்கு ஒரு வட்டியை நிர்ணயம் செய்யும். கொடுக்கும் கடனுக்கு அதைவிடக் கூடுதல் வட்டியை வைப்பார்கள்.
இதற்கு நடுவில் ஒரு இடைவெளி இருக்கும். இதற்கு Net Interest Margin என்று பெயர். இந்த வரம்பு உயரவே இல்லை. அப்படியே இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை. எனவே டெபாசிட் குறைந்துள்ளது. இதனால் வங்கியில் கடனுக்கான வட்டி கூடியுள்ளது. ஆகவே, மக்கள் லோன் போட்டு பொருட்களை வாங்க முன்வர தயங்குகிறார்கள்.
ஆர்பிஐ வங்கியில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் வட்டிக் குறையும். ஆனால், பணப்புழக்கம் அதிகமாகிவிட்டால் விலைவாசி அதிகரித்துவிடும் என ஆர்பிஐ பயப்படுகிறது. இதற்கு மத்திய அரசும் நிதியமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மால் இதற்கு ஒன்றுமே பண்ண முடியாது.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது ஒரு பக்கம் ரியல் எஸ்டேட் வியாபாரம் நன்றாக நடக்கிறது என்று அரசு சொல்கிறது. ஆனால் ஓஎம்ஆர் பக்கம் கட்டப்பட்ட வீடுகளை வாங்க ஆட்கள் இல்லை. இந்தப் பக்கம் மக்கள் வாங்கும் கடனுக்கு வட்டியை அதிகரித்துவிட்டு, நிதியமைச்சர் கார்பரேட் கம்பெனிகள் பெறும் கடனுக்கான வட்டியைக் குறைத்துவிட்டார்.
முன்பு 30% இருந்த வரியை 25% ஆக குறைத்துவிட்டார். தனி மனிதன் செலுத்தும் வருமான வரி தொகை என்பது காபரேட் கொடுக்கும் வரியைவிட அதிகமாக உள்ளது. கார்பரேட் கம்பெனிகளுக்கு வரி சலுகை கொடுத்ததால் அரசுக்கு வரக்கூடிய வருமானத்தில் 15% இடைவெளி விழுந்துள்ளது. அதை சரி செய்ய ஏதேனும் ஒன்றின் மீது வரியைப் போட வேண்டும். அதை மனதில் வைத்து பெட்ரோல் மற்றும் பாமாயில் மீது அந்த வரிச் சுமையை போட்டுவிட்டது மத்திய அரசு. இத்தனை காரணங்களால்தான் வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்காமல் அப்படியே தொடர்ந்து வருகிறது” என்கிறார்












Click it and Unblock the Notifications