வில்லங்க சான்றிதழ்.. தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கன் நிறுத்தமா? பதிவுத்துறையில் திடீர்னு என்னாச்சு
சென்னை: வில்லங்க சான்றிதழ் தொடர்பான புலம்பல்கள் திருப்பூரில் வெடித்திருந்த நிலையில், பத்திரப்பதிவில் புதிய டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும் அலுவலகங்களில், பல்லடம், கடந்த வருடம் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.. இதற்கு காரணம், பல்லடத்தை சுற்றியுள்ள 39 கிராமங்கள் உள்ளதால், தினந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு பணிகள் நடப்பது வழக்கமாகும்.

சார் பதிவாளர்: இந்நிலையில், நேற்றைய தினம் திடீரென பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் புகார்கள் கிளம்பின.. இந்த அலுவலகத்தில், வில்லங்க சான்று பிழைத்திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மனுக்கள் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.
வில்லங்கச் சான்றிதழில் பிழைகள் ஏதாவது இருந்தால், அதனை உடனடியாக திருத்தி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், வில்லங்க சான்றிதழில் தவறாக காட்டும்.. இந்த பிழை திருத்தத்தை மேற்கொள்ள விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், வங்கி கடன், கிரையம் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள்: விண்ணப்பங்கள் தேங்கி நிற்க தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது பத்திர அலுவலகத்தில் போதிய ஆட்கள் இல்லையா? என்பது தெரியவில்லை. எனவே, மாவட்ட பதிவுத்துறை நிர்வாகம், வில்லங்க சான்று பிழை திருத்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இப்படியொரு பிரச்சனையே இல்லை என்கிறார்கள் சார்-பதிவாளர் அலுவலகம் தரப்பில்.. பிழை திருத்த விண்ணப்பங்கள் எதுவுமே தேக்கம் இல்லை.. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே உடனுக்குடன் அவற்றுக்கு ஒப்புதல் அளித்து வருகிறோம் என்கிறார்கள்.
ஆன்லைன் டோக்கன்: இதற்கு நடுவே, தமிழகத்தின் அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் முறையில், டோக்கன் பெறும் வசதி 2 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வழக்கமாக, சார் - பதிவாளர் அலுவலகங்களில், "ஸ்டார் 2.0 சாப்ட்வேர்" வாயிலாக, பத்திர விபரங்கள் முன்கூட்டியே சரி பார்க்கப்படும்... குறிப்பாக, பத்திரம், அதை எழுதி கொடுப்பவர், பெறுபவர் குறித்த அடையாள ஆவணங்களும் சரி பார்த்தபிறகு, பத்திர பதிவுக்கான நேரம் ஒதுக்கி, ஆன்லைன் முறையில் டோக்கன்களை, வரிசைப்படி வழங்கப்படுவது வழக்கமாகும்.
ஸ்டார் 2.0: ஆனால், 2 நாட்களாகவே ஆன்லைன் முறையில் புதிதாக டோக்கன் வழங்கப்படவில்லையாம்.. இதற்கு காரணம், பத்திரப்பதிவுக்கான, "ஸ்டார் - 2.0" சாப்ட்வேர் மற்றும் இணையதளத்தில் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்து வருகிறார்களாம்.. இந்த பணிகளை முடிக்க, 4 நாட்கள் ஆகும் என்பதால், தற்சமயம் புதிய டோக்கன்கள் வழங்கப்படவில்லை என்று தொழில்நுட்ப குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் வழங்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்காலிகமானது தான் என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் பதிவுத்துறை தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications