செந்தில் பாலாஜியை விடாத ED.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்! எல்லா டாக்குமெண்டுகளும் வேண்டுமாமே
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல்களை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில், கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது பணி நியமனங்கள் பெற்று தருவதாக கூறி பணம் பெற்று அவர் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பணி நியமனங்களுக்கு பணம் பெற்று மோசடி செய்தது, ஏமாற்றுதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் ஒரு வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தும், மற்ற வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை ரத்து செய்து, அனைத்து வழக்குகளிலும் விசாரணையை முடித்து, இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி விசாரணையை தொடர்ந்த காவல்துறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை, அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை கேட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் தள்ளிவைத்து உத்தரவிட்டு உள்ளார்.
புழல் சிறையில் அமைச்சர்: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் தனக்கு ஜாமீன் தரக்கோரி ஏற்கனவே இரு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 முறை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். தான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக அவர் மனுவில் கூறி இருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications