ஆசிரியர் டூ பிரபல கொள்ளைக்காரன்.. தாம்பரம் தமிழ் செல்வியால் சிக்கிய இன்ஜினியரிங் மூளைக்காரர்
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண், ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு ஏடிஎம்மில் பணம் வரவில்லை.. அப்போது இளைஞர் ஒருவர், பணம் எடுக்க உதவுவது போல் நடித்து, தமிழ்செல்வியிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் பின்னை சொல்ல சொல்லி வாங்கி உள்ளார். உள்ளே போட்ட பின்னர், வேறு போலியான ஏடிஎம் கார்டை கையில் கொடுத்து, பணத்தை மோசடி செய்துள்ளார். இப்படி பலரிடம் மோசடி செய்தவர் சிக்கியது எப்படி என்று பார்ப்போம்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரிந்தால் பணத்தை எடுங்கள்.. இல்லை உங்களுக்கு பணம் எடுக்க தெரியாது என்றால், உறவினர்களை அழைத்து வாருங்கள். ஏனெனில் உங்களை ஏமாற்ற சிலர் அங்கு காத்துக் கொண்டிருக்கலாம்.. ஏனெனில் ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க வருவோரிடம், பணத்தை பறிக்க பல்வேறு யுக்திகளை கையாளுகிறார்கள். ஏ.டி.எம். கார்டு மற்றும் பின்னை வாங்கி கொண்டு, திரும்ப கொடுக்கும் போது, போலியான ஏடிஎம் கார்டை கையில் கொடுத்து தாம்பரத்தில் இன்ஜினியர் ஒருவர் ஏமாற்றி உள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையம்
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடைய மனைவி தமிழ்ச்செல்விக்கு 58 வயது ஆகிறது. இவர், வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார்.
இவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றிருக்கிறார். ஆனால் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வரவில்லை.
போலி ஏஎடிம் கார்டு
அப்போது தமிழ்செல்வியை அங்கிருந்த மர்ம நபர் கண்காணித்தபடி இருந்தார். அப்போது வேகமாக வந்த அந்த நபர், பணம் எடுக்க உதவுவது போல் ஆர்வமாக தமிழ்ச்செல்வியிடம் பேசியுள்ளார். ஏ.டி.எம். கார்டை வாங்கி, பணம் எடுப்பது போல் நடித்தார். பின்னர் பணம் வரவில்லை என கூறி, போலியான ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது
சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை கண்டு தமிழ்செல்வி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் மர்மநபர், தனக்கு உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டது தமிழ்செல்விக்கு தெரியவந்தது.
சிசிடிவி காட்சி
இந்த நூதன மோசடி தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மலூர் ஹரிலேரியை சேர்ந்த 40 வயதாகும் பிரபல கொள்ளையன் திம்மா ராயப்பா என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
பிரபல கொள்ளையன் கைது
தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்று கொள்ளையன் திம்மா ராயப்பாவை கைது செய்து தாம்பரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். என்ஜினீயரிங் பட்டதாரியான திம்மா ராயப்பா, ஐ.டி. ஊழியராகவும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஆன்லைன் தொழிலில் பண முதலீடு செய்து பணத்தை இழந்த பிறகு ஏ.டி.எம். மையங்களில்் இதுபோல் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தாராம்.
ஏடிஎம் கார்டில் பசை
ஏ.டி.எம். கார்டில் பசையை தடவி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்வார். அப்போது கார்டில் உள்ள பசை எந்திரத்தில் ஒட்டிக் கொள்வதால் அதன் பிறகு வரும் முதியவர்கள் பணம் எடுக்க முடியாமல் திணறுவார்களாம். அவர்களுக்கு உதவி செய்வது போல் ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கி கொள்வாராம்.
மற்றொரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தார்
பின்னர் பணம் எடுப்பது போல் நடித்து, இயந்திரத்தில் பணம் வரவில்லை என்று கூறி அவர்கள், எந்த வங்கி கார்டு வைத்திருக்கிறார்களோ அந்த வங்கி கார்டுபோல் தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம் கார்டை கொடுத்து விடுவாராம். பின்னர் அவர்களின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மற்றொரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணத்தை எடுத்து உல்லாசமாக செலவு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
100 வழக்குகள்
இவர் மீது வேலூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கீழமங்கலம், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது, கர்நாடக மாநிலத்திலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications