எல்லாமே யூகம்.. தனி நீதிபதி தீர்ப்பால் முடங்கிய அதிமுக.. இபிஎஸ் தரப்பு முன்வைத்த "முக்கிய" வாதம்
சென்னை: அதிகாரம் பெற்றவர் பொதுக் குழுவை கூட்டவில்லை என்ற தனிநீதிபதியின் தீர்ப்பே தவறானது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது வாதத்தை முன் வைத்துள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ்ஸும் அம்மன் வைரமுத்துவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளிக்கப்பட்டது.
அதில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். அப்படியானால் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என்பதாகும்.

ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு
இது ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு ஆகும். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகாததால் அந்த வழக்கை ஒத்தி வைக்க ஓபிஎஸ் தரப்பு கேட்டது.

இறுதி விசாரணை
அதன்படி இந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் விஜய் நாராயணன் சிஎஸ் வைத்தியநாதன், அரிமா சுந்தரம், நர்பதா சம்பல் ஆகியோர் ஆஜராகினர்.

ஓபிஎஸ் தரப்பு
அது போல் ஓபிஎஸ் தரப்பு சார்பில் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வாதம் செய்து வருகிறார்கள். இதில் எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் அதிகாரம் பெற்றவர் பொதுக் குழுவை கூட்டவில்லை என்ற தனிநீதிபதியின் தீர்ப்பு தவறு. யூகத்தின் அடிப்படையில் தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார்.

எடப்பாடி தரப்பு வாதம்
பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானது தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது. தனி நபர் பயனடையும் வகையில்தான் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளதே தவிர தொண்டர்கள் பயனடையும் வகையில் இல்லை. தனி நீதிபதியின் உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்படாத நிலை உள்ளது என எடப்பாடி தரப்பினர் வாதத்தை முன் வைத்துள்ளனர். இது இறுதி விசாரணை என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்றைய தினமே தீர்ப்பு வருமா இல்லை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications