“பொறுப்பு டிஜிபி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை” : அமைச்சர் ரகுபதி காட்டம்
சென்னை: "தமிழ்நாட்டில் பொறுப்பு டி.ஜி.பி என்ற முறையைக் கொண்டுவந்ததே அதிமுக ஆட்சியில்தான். இன்று அதைப் பற்றி பேச எந்த அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. கடந்த 2011ல் ராமானுஜத்தை பொறுப்பு டி.ஜி.பி ஆகவும், ராஜேந்திரனை பொறுப்பு டி.ஜி.பி ஆகவும் கொண்டு வந்தது அதிமுகதான்" என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணிக்காக தான் இப்படி பேசி வருவதாக திமுக தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு காவல்துறை டிஜிபியை நியமிக்காமல், பொறுப்பு டிஜிபி நியமனம் செய்ததை கடுமையாக விமர்சித்திருந்தார். "தமிழக அரசு, நிரந்தர டிஜிபியை இன்றுவரை நியமிக்கவில்லை. அதனால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ஒரு நிரந்தர டிஜிபி இல்லாதபோது எப்படி சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்? சரியாக பராமரிக்கப்படும்?
இனியும் காலதாமதம் செய்யாமல் ஒரு நிரந்தர டிஜிபியை நியமித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் நாள்தோறும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலையும் காட்சியை பார்த்திருக்கிறோம். ஆங்காங்கே பாலியல் வன் கொடுமைகள், திருட்டு, கொலை கொள்ளை நடந்த வண்ணம் உள்ளது. இந்த அரசு கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது" என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது பேசிய அவர், "பாஜகவை காப்பாற்றுவதற்காக திமுக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கிறார். பாஜகவின் விசுவாசி, அடிமை என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்" என விமர்சித்துள்ளார்.
மேலும், "யூடியூபில் வருவதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது. பொறுப்பு டிஜிபி நியமனம் என்பதை அறிமுகம் செய்து வைத்ததே அதிமுக அரசுதான். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். நிரந்தர டிஜிபி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மத்திய அரசு காரணம்.
தமிழ்நாட்டில் பொறுப்பு டி.ஜி.பி என்ற முறையைக் கொண்டுவந்ததே அதிமுக ஆட்சியில்தான். இன்று அதைப் பற்றி பேச எந்த அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. கடந்த 2011ல் ராமானுஜத்தை பொறுப்பு டி.ஜி.பி ஆகவும், ராஜேந்திரனை பொறுப்பு டி.ஜி.பி ஆகவும் கொண்டு வந்தது அதிமுகதான். தங்களுக்கு வேண்டிய ஒருவரை டிஜிபியாக நியமிக்க மத்திய அரசு முயல்கிறது, அது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடுபடாது.
எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி மத்தியய பா.ஜ.க அரசை காப்பாற்றி வருகிறார்.
அது டி.ஜி.பி விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க அரசு அது டி.ஜி.பி மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டிஜிபி மூலம் நடக்க முடியவில்லை. பொறுப்பு டி.ஜி.பி பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது" என ரகுபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications