அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் - அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அட்வைஸ்!
சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்ய வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்மைப் பற்றி அண்ணாமலை பேசுவதில்லை, நீங்களும் எதுவும் பேச வேண்டாம்;
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்னும் வேகப்படுத்துங்கள் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுக மா.செக்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது, தேர்தல் பணிகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை 118 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 2026 வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சாவடிக்கு 8 பேர் வீதம் பூத் கமிட்டி அமைத்து, பட்டியலை சமர்ப்பிக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை பற்றி பேசவேண்டாம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்ய வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தும் தேவையற்ற விவாதங்கள், பேச்சுகளை தவிர்க்குமாறு அதிமுகவினருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறாராம். நம்மைப் பற்றி அண்ணாமலை பேசுவதில்லை; நீங்களும் எதுவும் பேச வேண்டாம் என கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி அட்வைஸ்
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்னும் வேகப்படுத்துங்கள் என்றும், தவெக தலைவர் விஜய் பேச்சை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று காலை சென்னையில் நடைபெற்ற ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஒரே மேடையில் ஒன்றாக அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். ஜிகே மூப்பனார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும்போது, அண்ணாமலையை தனக்கு அருகே அழைத்து நிற்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி. மேடையில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சகோதரர் என குறிப்பிட்டார்.
அண்ணாமலை பாசம்
அண்ணாமலை பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று குறிப்பொட்டார். "சாமானிய மனிதர்களில் இருந்து குறிப்பாக டீ கடையிலிருந்து ரோட்டில் எங்கு போனாலும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணன் இந்த மேடையில் இப்பொழுதுதான் பேசிவிட்டு போய் இருக்கிறார்கள். 2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப் போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம், 2026ல் மாற்றம் வரட்டும்." எனப் பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என பேசி வந்தார் அண்ணாமலை. அதற்கு அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பதில் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு அண்ணாமலை, தேசிய தலைமை தான் முடிவு செய்யும் எனப் பேசி இருந்தார். இந்தச் சூழலில் இருவரும் நெருக்கமாகி உள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications