திமுக அதிமுக இடையே தான் போட்டியே.. 210 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி! அப்போ தவெக?
சென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அதிமுக இடையேதான் போட்டி எனவும், பிற கட்சிகள் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படலாம் ஆனால் அது நடக்காது என கூறியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கூட்டணிக் கட்சிகளிடம் பேசாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை நான்கு கட்டப் பிரச்சாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் ஐந்தாவது கட்டப் பிரச்சாரம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாகப் பேசியிருக்கும் அவர்," மேகதாது அணைப் பிரச்சனையைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் நீதிமன்றங்கள் மூலமாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை என்று கருதுகிறேன். திமுக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் திமுக பேசியிருக்கலாம். ஒருவேளை மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். இன்றைக்கு தமிழகத்தினுடைய ஜீவநதி காவிரி. இனியாவது திமுக தலைவர் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை உடன் பேசி கர்நாடகாவின் முதல்வர், நீர்வளத் துறை அமைச்சரிடம் பேச வேண்டும்.
மேகதாது அணை
மேகதாது அணை கட்டும் முயற்சியைக் கைவிடச் செய்ய வேண்டும். இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 152 ஆக உயர்த்திக் கொள்ளலாம் என உத்தரவு பெற்றார். முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்த அணையைப் பலப்படுத்த வேண்டும் என உத்தரவு பெற்றார்.
முல்லைப் பெரியாறு
ஆனால் அணையைப் பலப்படுத்தும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்குக் கேரள வனத்துறை அனுமதிக்கவில்லை. தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசிடம் பேசி முல்லை பெரியாறு அணையைப் பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முயற்சி எடுப்பாரா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்." என்றார்.
திமுக தவெக
திமுக, தவெக இடையேதான் போட்டி என்ற கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அது அவர்களது சொந்த விருப்பம். அதுதான் எதார்த்தமான உண்மை. எந்தெந்த கட்சிக்கு இடையே போட்டி என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப கூர்மையானவர்கள். சிந்திக்கக் கூடியவர்கள். தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. தமிழகத்தை இரண்டு கட்சிகள்தான் ஆண்டு இருக்கின்றன.
திமுக அதிமுக
அந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி அது. எந்தக் கட்சி என்பது நாட்டு மக்களுக்கு முழுமையாகத் தெரியும். அதோடு அதிமுக தமிழகத்தை கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் தான் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக இருந்தது. அதனால் மக்களும் பல நன்மைகளைப் பெற்றிருந்தார்கள். அதனால் தான் நாங்கள் மக்களைச் சந்திக்கும்போது தெளிவாக எடுத்துச் சொல்கிறோம். அதே வேளையில் திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் புழக்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் எனப் பல போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
திமுக அரசு
மக்கள் செல்வாக்கை திமுக இழந்து கொண்டிருக்கிறது. நடக்க இருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. நீட் தேர்வில் மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் நடக்கிறது. அதில் விலக்கு பெற்றுத் தருவோம் என மாணவ மாணவிகளைத் தவறாக வழிநடத்துவது இதுதான் திமுகவின் சாதனை" என்றார்.












Click it and Unblock the Notifications