காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல் தற்போது சமாதான பேச்சுவார்த்தை கட்டத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பும் இடையே தொடர்ந்து மறைமுக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி சில கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்ளாததால், சண்முகம் - வேலுமணி மோதலை தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனது கட்சிக்குள் கடும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக, தேர்தல் தோல்விக்கு பிறகு முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட தொடங்கினர்.

இதற்கிடையே, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தது கட்சிக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக உட்கட்சி மோதல்
இதையடுத்து, அந்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்தது. பதிலுக்கு, வேலுமணி தரப்பும் எதிர் மனு தாக்கல் செய்ததால் மோதல் மேலும் தீவிரமடைந்தது. இந்த சூழலில், தவெக அமைச்சரவையில் அதிமுக அதிருப்தி அணிக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தில் அந்த அணியிலிருந்து யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எஸ்பி வேலுமணி
இதனால், அடுத்தகட்டமாக மீண்டும் அதிமுகவுடன் இணைந்து செல்லும் முயற்சியில் அந்த தரப்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பேசிய எஸ்.பி.வேலுமணி, "எங்களுக்குப் பொதுச்செயலாளர் இன்னும் எடப்பாடி பழனிசாமிதான். கட்சியை வலுப்படுத்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்" என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சே சமாதான முயற்சிக்கான சிக்னலாக பார்க்கப்பட்டது.
சி.வி.சண்முகம்
இதற்கிடையே, சி.வி.சண்முகம் ஆதரவாளரும் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏவுமான சுகுமார், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசியது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. அப்போது, "மனக்கசப்புகளை மறந்து மீண்டும் ஒன்றாக செயல்பட தயாராக இருக்கிறோம்" என்ற தகவல் எடப்பாடி தரப்புக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இருதரப்பினரும் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக, தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் தாக்கல் செய்துள்ள மனுக்களை வாபஸ் பெற வேண்டும், சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட தகுதி நீக்க மனுக்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி நீக்கிய 36 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் வேலுமணி - சி.வி.எஸ் தரப்பு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சமரசம்
மறுபுறம், கட்சியில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு அவசியம் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், எந்த அளவுக்கு சமரசம் நடைபெறும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி மோதல் கட்சிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மூத்த நிர்வாகிகள் பலரும் சமாதான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மீண்டும் போர்க் கொடி
இதனால் அடுத்த சில நாட்களில் அதிமுக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சண்முகம் தரப்பு கண்டிஷன்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து எடப்பாடிக்கு எதிராக போர் கொடி தூக்க மீண்டும் முடிவு செய்திருக்கிறது எஸ் பி வேலுமணி சி.வி சண்முகம் தரப்பு.
சபாநாயகருடன் சந்திப்பு
இதை அடுத்து தான் சபாநாயகரை சந்தித்து சட்டசபை அதிமுக குழு தலைவராக எஸ்பி வேலுமணியையும் கொரடாவாக விஜயபாஸ்கரையும் அறிவிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதத்தால் கட்சி உடையும் சூழலுக்கு சென்றுள்ளதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதே நேரத்தில் பல சீனியர்கள் இரு அணியும் ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications