கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம்
சென்னை: தமிழகத்தில் கீழ்த்தரமான அரசியலை குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பு, தமிழகத்தில் கீழ்த்தரமான அரசியலை குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்.

சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் தான் அமைத்த பொய்க்கால குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வருணித்த களமாடினாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒரு சில கட்சிகளை தேடிப் போய் ஆதரவு கேட்டதும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில சட்டசபை உறுப்பினர்களை சோஃபாவோடு போய் புஷ்பா பட பாணியில் ஆதரவு பெற்றதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதிமுக மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால் தியாகத்தால் வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களிடம் இருந்து கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள தவெக அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை குதிரை பேரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
தற்போதைய தவெக அரசின் இது போன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும். எத்தனையோ துரோகச் செயல்களையும் முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கித்தான் மக்கள் பணியாற்றி வருகிறது அதிமுக என்ற மாபெரும் பேரியக்கம்.
இந்த அரசிற்கு முட்டு கொடுக்கக் கூடிய சட்டசபை உறுப்பினர்களாக இருந்தாலும் தற்போது ராஜினாமா செய்துள்ளவர்களாக இருந்தாலும் திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இது போன்ற துரோக செயல்களால் அதிமுகவை அசைத்து பார்க்கலாம், வீழ்த்தி விடலாம், அந்த இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல பழைய மந்தையில் புதிய கள் என்பது போல் அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என கண்டித்துள்ளார்.












Click it and Unblock the Notifications