‛294’ பெரும்படை.. ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அறிவித்த கையோடு அமமுக ‛மெகாமூவ்’!டிடிவி தினகரன் அதிரடி
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவரை டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவித்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையை அவர் செயல்படுத்தி உள்ளார்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இளம்வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். 29 வயது மட்டுமே நிரம்பிய சிவபிரசாந்த் என்பவரை டிடிவி தினகரன் இன்று வேட்பாளராக அறிவித்தார். இதையடுத்து அடுத்தக்கட்டமாக டிடிவி தினகரன் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக, அதிமுக, தேமுதிகவை விஞ்சும் வகையில் ‛மெகாமூவ்' ஒன்றை செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா காலமானார். இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதுதொடர்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தார். மேலும் தானும் கூட போட்டியிட வாய்ப்புள்ளது என டிடிவி தினகரனே கூறினார். இது அதிக முக்கியத்துவம் பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டி.. 29 வயது சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிப்பு
அமமுக வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் தான் இன்று சென்னையில் டிடிவி தினகரன் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அறிவித்தார். இவருக்கு வயது வெறும் 29 தான். இவர் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
294 பேருடன் பெரும்படை
இந்த வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் வேட்பாளர் அறிவித்த கையோடு டிடிவி தினகரன் அடுத்தக்கட்ட முக்கிய மூவ் ஒன்றை செய்துள்ளார். அதாவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக தேர்தல் பணிக்குழு கட்சியின் துணை பொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு தலைமையில் செயல்பட உள்ளது. மொத்தம் 294 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சிஆர் சரஸ்வதி
இதில் முன்னாள் எம்பி எஸ் அன்பழகன், கட்சியின் துணை பொதுச்செயலாளர் எம் ரங்கசாமி, முன்னாள் அமைச்சரான செந்தமிழன், கயத்தாறு ஒன்றியகுழு தலைவர் மாணிக்கராஜா, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் எம்எல்ஏவும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இ மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏவும் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ்கே செல்வம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், முன்னாள் எம்எல்ஏவும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பார்த்திபன், கழக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள்
மேலும் முன்னாள் எம்பி சி கோபால், முன்னாள் எம்எல்ஏ ஆர்ஆர் முருகன், தருமபுரி மாவட்ட செயலாளர் டிகே ராஜேந்திரன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கதிர்காமு, முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், கழக அமைப்பு செயலாளர் பாண்டுரங்கன் உள்பட 294 பேர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.