ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- 16 பேர் கொண்ட தமாகா தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவும் காங்கிரஸுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் தமாகா ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் தமாகா போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அதிமுக இபிஎஸ் அணி போட்டியிட விரும்புகிறது. இதனை தமாகாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஓபிஎஸ் அணி போட்டியிட விரும்பினாலும் பாஜகவை போட்டியிட வைக்க வேண்டும் என முயற்சிக்கிறது. பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இப்போது அதிமுக இபிஎஸ் அணி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் அதிமுக இபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்க உள்ளது. அக்கட்சியின் கேவி ராமலிங்கம், தென்னரசு உள்ளிட்டோர் சீட் பெறுவதற்கு மும்முரம் காட்டுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை - போட்டியும் இல்லை என அறிவித்துவிட்டது பாமக. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸையே மநீம ஆதரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல தேமுதிக தமது நிலைப்பாடு தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தியது. தேமுதிகவும் தனித்தே இத்தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேமுதிகவில் சந்திரகுமார் இருந்த போது அக்கட்சி வென்ற தொகுதி இது. சந்திரகுமார் பின்னர் திமுகவுக்கு சென்றுவிட்டார். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமாகா தலைவர் ஜிகே வாசன் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் கடந்த தேர்தலில் வெற்றியை இழந்த யுவராஜாவும் இடம்பெற்றுள்ளார்.