ஓபிஎஸ் நீக்கிய சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் செந்தில் முருகன்
செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ பன்னீர் செல்வம் அறிக்கை
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த செந்தில் முருகன் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை எழுந்த நிலையில் இரட்டை தலைமைகளாக இருந்த ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி பக்கம் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இன்னாள் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள், 99 சதவீத பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு இந்த ஆதரவு அலை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

ஜேசிடி பிரபாகரன்
அவருடன் ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.

உச்சநீதிமன்றம்
இந்த பொதுக் குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றார் ஓபிஎஸ். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு போட்டியாக செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக ஓபிஎஸ் அறிவித்தார். இதனால் இரட்டை இலை முடங்கும் அபாயம் இருந்ததால் சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிமுக சார்பில் ஒரு பொது வேட்பாளரை பொதுக் குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று அவைத் தலைவர் நீதிமன்றத்தில் வந்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். இதையேற்ற ஓபிஎஸ், செந்தில் முருகனின் வேட்பு மனுவை வாபஸ் பெற வைத்தார்.

ஜூலை 11
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனிடையே செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கு பகுதியில் உள்ள சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மா.செ கூட்டம்
இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழக அமைப்பு செயலாளர் பி. செந்தில் முருகன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்ற முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த செந்தில் முருகன் அதிமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications