ஈரோடு கிழக்கு காங். எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மருத்துவமனையில் அனுமதி
ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலியால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா.

திருமகன் ஈவெரா திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என அதன் கூட்டணி கட்சியான திமுக தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தமிழ்நாடு அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியானது திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. இதுவரை இல்லாத பல்வேறு புதிய புதிய சர்ச்சைகளை ஈரோடு தேர்தல் களம் ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகின. கடந்த 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156, அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகள் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை தவிர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுமே டெபாசிட் இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். 38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications