ஈரோடு கிழக்கு வேணுமா.. திமுக சொன்ன கண்டிஷன்.. ஆடிப்போன காங்கிரஸ்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே போட்டியிட ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்டுப்பெறுவதில் செல்வப்பெருந்தகை தீவிரமாக உள்ளாராம். அதேவேளையில், திமுக போட்ட கண்டிஷனை கேட்டு காங்கிரஸ் ஆடிப்போயுள்ளதாம். திமுக போட்ட கண்டிஷன்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலன் இன்றி கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு இன்று தொடங்கியுள்ளது.
5 ஆம் தேதி வாக்குப்பதிவு
வரும் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி 4 ஆண்டுகளுக்குள் 3-வது முறையாக தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் திமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அக்கட்சியினர் மத்தியில் வலுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளது.
காங்கிரஸ் போட்டியிட விருப்பம்
பாஜகவும் போட்டியிடுவதா? இல்லையா? என்ற முடிவினை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எப்போதும் போலவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் திமுகவிடம் கேட்டுப்பெறுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
அதாவது, ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதற்காக தொகுதியை கைப்பற்ற கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் முயற்சி எடுத்திருக்கிறார். தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே திமுக ஒதுக்க வேண்டுமாயின், ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திலிருந்து ஒருவர் களமிறங்க வேண்டும்.
திமுகவின் அந்த கண்டிஷன்
அப்படியிருந்தால் மட்டுமே திமுகவிடம் தொகுதியைக் கேட்டுப்பெற முடியும் என முடிவெடுத்து, இளங்கோவன் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. ஆனால் அவர்களோ, "வேலையைப் பாருங்க. இனி எங்களுக்கு அரசியலே வேண்டாம்" என்று முகத்தில் அறைந்த மாதிரி செல்வப்பெருந்தகையிடம் சொல்லி விட்டனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விழித்திருக்கிறார்.
இதற்கிடையே, திமுக தலைமையிடம், "தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என தகவல் சொல்ல, "அப்படியானால் தேர்தலுக்கு இவ்வளவு இத்தனை கோடிகள் செலவாகும். அதனை ரெடி பண்ணிட்டுச் சொல்லுங்கள் என்றிருக்கிறது அறிவாலயம். அதே சமயம், தேர்தல் செலவு என திமுக தரப்பில் சொல்லப்பட்ட தொகையைக் கேட்டு ஆடிப்போய்விட்டாராம் செல்வப்பெருந்தகை என்று காங்கிரஸ் தரப்பிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications